Tuesday, February 26, 2013


நீலபத்மம், தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா.....
26 ஏப்ரல் 2013நீல பத்மநாபனின் 75 வயது நிறைவு நாள்......

சென்ற ஆண்டுக்கான நீலபத்மம் தலைமுறைகள் விருதுகள்
வழங்கும் விழா 26 ஏப்ரல் 2013 வெள்ளிக்கிழமையன்று மாலை 5.30க்கு தமிழ்ச்சங்கம் பி.ஆர்.எஸ் அரங்கில்
நடைபெறவிருக்கிறது.அவ்வமயம் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் மா திருமலை ,மலையாள மொழி இயல் துறைத் தலைவர் முனைவர் எம்.ஆர். தம்பான், நவீன விருட்சம் ஆசிரியர் திரு. அழகிய சிங்கர், கவிதாயினி திருமதி திலகபாமா, திரு குளச்சல் யூசப் -இன்னும் பல தமிழ், மலையாள அறிஞர்கள் பங்கெடுக்கிறார்கள்.பரிசுபெற்ற கவிதையும் , கதையும் அவற்றின் ஆசிரியர்களே வாசிக்கிறார்கள்.தவிர விழாவில் வெளியிடவிருக்கும் நீல பத்மநாபனின் கவிதைத் தொகுப்பிலிருந்து ஒருசில கவிதைகள் வாசிக்கபடவிருக்கிறது. .சங்கச்செயலாளர் க.வானமாமலையின் ந்கைச்சுவை நிகழ்ச்சி கூத்தரங்கின் சார்பில் மேடையேறுகிறது.  நீலபத்மநாபனின் சில தமிழ், மலையாள  நூல்கள்   வெளியிடப்படுகின்றன.   அனைவரும் வருக. 
                                                                           செயலாளர்
                                                         திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம்



Wednesday, February 20, 2013

கவிதை


மனமாசுக்கள் அகன்றிட.....

நீல பத்மநாபன்

பொங்கலோ பொங்கல்

ஆற்றுகால் அம்மைக்கு பொங்கல்

காடும் மலையும் தாண்டி

அனந்த சயனத்தில் அனுக்கிரகம் பொழியும்

புண்ணிய புராதன பூமியில்

வந்து வாழ்ந்தருளும் குடமலைத் தெய்வமே

ஆற்றுகால் அம்மையே

உனக்கு பொங்கலிட்டு வழிபட

குடும்ப கெடுபிடிகளையெல்லாம் மீறி

கூட்டம் கூட்டமாய் ஓடோடி வந்த

உள்ளூர் வெளியூர் மங்கைகள் நாங்கள்

பொங்கல் போடும் உன் திருமுற்றம் இந்நகரம்

எங்கெங்கும் குவிந்து உயரமாய் எழுந்துநிற்பது

குப்பைக்கூளங்களின் மாசுமலையன்றோ....

அவை எரிந்துயரும் நச்சுப்புகையில்

கறுத்திருண்ட ஆகாயமதில்

இப்போதெல்லாம் கருடனல்ல கரும்சிறகுகள்

வீசி,கூர்மையான நகங்கள் நீட்டி பொங்கல்

பானைகளை பறித்திட வட்டமிடும் பருந்துகள்..

“தெரியாதாடீ உனக்கு, இந்த காந்தளூர்’சாலை’

இப்ப இந்த பட்டணத்தின் விளப்பில்சாலையாம்

அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வரும்போது

இங்கெல்லாம் குப்பைக்கூளங்களை கொணர்ந்து

இறக்கும் லாரிகள் வரிசையாக இருக்குமாம்

அப்பொ அவங்கவங்க வீட்டில்தான் பொங்கல்”



குப்பைக்கூளங்களின் இடையில்

ஆயிரமாயிரம் அடுப்புக்களில்,

கோயில் பண்டார அடுப்பிலிருந்து பகர்ந்து

வந்த அக்கினி ஜ்வாலையில்

பொங்கி வழியும் பொங்கலோ பொங்கல்...

ஆற்றுகால் அம்மைக்கு பொங்கல்

எங்களையும் உன்னையும் இந்த துர்கதிக்கு

ஆளாக்கியவர்களின் மனமாசுக்கள் அகன்றிட

பொங்கலோ பொங்கல்.....



விளப்பில் சாலை= புறநகர் பகுதியில் நகர குப்பைக்கூளங்களைக் கொணர்ந்து இயற்கை உரம் தயாரிக்க ஆர்ஜிதம் செய்யப்பட்ட இடம். பத்து அண்டுகளாய் உரத்தொழிற்சாலைத் தொடங்ப்படாமல் குப்பைக்கூளங்களை குவித்துக்கொண்டிருந்ததால் சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்பட்ட அப்பகுதி வாழ் மக்களின் எழுச்சிக் காரணமாய் கடந்த ஒராண்டு காலமாய் இந்நகர குப்பைக்கூளங்கள் அங்கு கொண்டுப்போகப்படுவதில்லை.

. 2013



Tuesday, February 19, 2013

நேற்று இன்று


        கவிதை


                                                  நேற்று
                         இன்று
                                 நீல பத்மநாபன்
                தன் காரிய சித்திக்காக
                பரஸ்பரம் சிரம் கொய்து
                பொன் தாம்பாளத்தில் வைத்து
                ஐயனே உம் பாதாரவிந்தத்தில்
                சுயம் சமர்ப்பித்து
                சிந்தை குளிர்ந்திருந்தோம் நாங்கள்..........
                உம்மை தூக்கியெறிந்த பின்னர்
                சாட்டைவார் வீசி
                                    இட்டுச்செல்ல நாதனின்றி
                பரஸ்பரம் பழி கூறி
                தந்த கோபுரத்தில்
                தம் போக்கில் ஆடிக்களிக்கிறோம்......

                                                                                                                        

Tuesday, November 13, 2012

தேடித்தேடி


            தேடித் தேடி  
 அமைதியைத் தேடிதேடி
அவனியில் சகல சராசரங்களுக்கும்
சாந்தியும் சமாதானமும் அளிக்கும்
ஆண்டவன் சன்னிதிகளெல்லாம்
மாறி மாறிச் சென்றுபார்த்தால்
அகத்தை அவனில்
லயிக்க விடாத
ஆர்ப்பாட்டங்கள்.......,
ஆரவாரங்கள்...........,
போட்டாப்போட்டிகள்.......,
ஒலி,ஒளி,சுற்றுப்புற மாசுக்கள்.....,
சந்தைக்கடைகள் போல்,
ச்ந்துமுனைகள் போல்,
சட்டசபைகள் போல்.......!
                          நீல பத்மநாபன்
                            9-11-2012

                                      


                                                                      
               
                            

                                                  சூக்தங்கள்

              பலதில் உடன்பட்டாலும்
                சிலதில் மாறுபட்டால்
                எதிரியாய் முத்திரை
                நாட்டிலும்
                வீட்டிலும்....

                பிறவி வாசனையாய்
                உடன் வந்த துறை
                அன்னமிடும் தொழிலாய்
                அமையாதிருப்பினும்
                வந்து வாய்த்ததில்
                முழுத்திறமையைக் காட்டி
                முன்னுக்கு வர
                முயற்சி கொள்ளலாகாதா.....
                                            நீல பத்மநாபன்   
                                                 2011

Saturday, October 27, 2012


கவிதை
              இப்படியும் சில நாட்கள்
                                 நீல பத்மநாபன்
      சில நாட்கள் இப்படித்தான் விடிகின்றன ஏனோ.......
   எதையெதையெல்லாமோ செய்து தீர்க்க
   வெம்பும் மனமுடன் தீவிர சித்தமுடன்
   முழுமுனைப்பில் களத்தில் இறங்கினால்
   எதிர்பாராமல் குறுக்கே வந்து விழுந்து
   கதிகலங்கச் செய்துவிடும் ‘சகுனம் முடக்கிகள்’.....
   கூடவே வாழ்கிறவர் கூர் சொல்லாக இருக்கலாம்…,
   தொலைதூரத்திலிருந்து செவிவழி புகும்
   தொலைபேசி குரல்...,. மின் தடை..,.கணினிக் கோளாறு..,
   முன் அறிவிப்பின்றி வரும் விருந்துகள்
   இன்னும் இன்னும் எத்தனை எத்தனையோ…!
   இவற்றிலிருந்தெல்லாம் மீண்டு வருகையில்
   மரத்துப்போய்விடும் உள்ளம்...,உறுப்புக்கள்....
   அன்றைய தினமும் வெறுமனெ
    பாழாய் முடிந்துவிடப்போகிறதே......,     
   மீதியிருக்கும் அற்பசொற்பம் ஆயுள் ஏட்டில்
   ஒரு தாள் கூட அநியாயமாய்
   காலகாற்றில் பறந்து மறைந்துபோகவேண்டியதுதானா?
   அயர்ச்சி..., ஆதங்கம்....முடியப்போகும் நாளின்
   அந்திம யாமத்தில் மனம் குமைந்து
   தலைச்சாய்க்க எண்ணுகையில்...
   எங்கிருந்து, எப்படியென்றுத் தெரியவில்லை
   ஜில்லென்று, உள்ளுக்குள்ளே பாலாழியாய்
   நுரை ததும்பி பொங்கும்                           
   உன்மத்தம் கொள்ளவைக்கும் உற்சாக போதை.....,ஊக்கம்........    
   அதில் மீண்டும் உருத்தெரியும் கர்ம மார்க்கம்...,சுதர்மம்...,
   விக்கினங்கள் எல்லாம் கரைந்துருகி....!
                                             விஜய தசமி
                                              24-10-2012.

                                             
                                            
                                                  

Wednesday, October 17, 2012

campus


காலேஜ்கேம்பஸ்
கல்லூரிநினைவுகள்:
எழுத்தாளர்நீலபத்மநாபன்

எழுத்தாளர் நீல பத்மநாபனுக்கு கேரள பல்கலைக்கழக கல்லூரியில் அடியெடுத்து வைக்கும்போதே அவருடைய மனது குதூகலிக்கிறது. பிரமாண்டமான காம்பவுண்டு சுவரைத்தாண்டி அழகான பூங்காவைத்தாண்டி கம்பீரமாக நிற்கிறது 1866.ல் கட்டப்பட்ட இந்த கல்லூரி. முன்புறம் ராஜராஜவர்மாவின் சிலை..நீல பத்மநாபன் 1956-58 காலகட்டத்தில் படித்த இயற்பியல் துறை படிக்கட்டில் ஏறி வராண்டாவைப்பிடித்தபடி பழைய நினைவுகளை அசைபோடுகிறார். பிசிக்ஸ் மெயினாக  இருந்தாலும் தமிழ்த்துறையோடு அதிக தொடர்புவைத்திருந்தார் நீல பத்மநாபன்.  கல்லூரி நினைவுகளுக்காக நம்முடன் பயணித்தவர் தமிழ்த்துறை நூலகத்தில் சென்றதும் அங்கிருந்த மாணவிகளுக்கு அவருடன் உரையாடுவதில் மிகவும் மகிழ்ச்சி. அங்கிருந்த  கிறிஸ்டில்டா என்ற மாணவி நீல பத்மநாபன் கதைகளைப்பற்றி முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்வதாக கூற மனதுக்குள் மத்தாப்பூவாய் முகம் மலர்கிறது.
அந்த மாணவியும் மற்ற மாணவிகளும் கேட்ட சந்தேகங்களை பொறுமையுடன் நிவர்த்திச்செய்கிறார். சில ஆலோனைகளும் வழங்குகிறார். இந்த கல்லூரியில் இருந்து வெளிவந்து ஆண்டுகள் 54 கடந்து விட்டபின்னரும் இக்கல்லூரியின் உடனான உறவு இன்னும் அகல வில்லை. பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக அடிக்கடி வந்து போகிறார். தமிழ்த்துறையைச்சேர்ந்த அனைவருக்கும் அவர் பரிச்சயமானவராக இருக்கிறார். இளம் தலைமுறை மாணவ மாணவியர்கள் அவரை வணக்கத்துடன் வரவேற்று நலம் விசாரிக்கின்றனர். 
அங்கே சுற்றிச்சுற்றி வந்து பழைய நினைவுகளை நம்மிடம் பகிர்ந்து கொள்ளத்துவங்கினார்; நகரச்சந்தடியிலிருந்து சற்று விலகியிருந்த
நாலாஞ்சிறை எனும் இடத்திலிருந்த மார் இவானியேஸ் கல்லூரியில் இண்டர்மீடியேட் முடிச்சதும் இந்த கேரள பல்கலைக்கழக கல்லூரியில் பி.எஸ்சி இயற்பியலில் சேர்ந்தேன். இண்டர்மீடியேட்டில் நல்ல மார்க் இருந்ததால் விரும்பிய குரூப் இங்கே கிடைத்து. நான் பள்ளியில் மலையாள மீடியம் படித்தாலும்(கல்லூரிகளில் ஆங்கில மீடியம்) பிறந்து வளர்ந்தது, மழலை பேசி வளர்ந்தது எல்லாம் தாய்மொழி தமிழில் என்பதால்,  சிறுவயதிலேயே நான் எழுதுவது தமிழில் தான். கையெழுதுப்பத்திரிகை நடத்துவது, கவிதைகள், கதைகள், தெருவில் சிறுவர்கள் நடிப்பதற்கு நாடகங்கள்-இப்படி பல்வேறு விஷயங்களில் எழுத்தார்வமுடன் இருந்திருக்கிறேன்.  இங்கே நான் இயற்பியல் பாடம் எடுத்திருந்தாலும் ,இங்குள்ள தமிழ்த்துறையின் மீதான என் அக்கரையும் அபரிமிதமானஆர்வமும் காரணமாக இயற்பியல் பாடத்தை கோட்டை விட்டுவிடவில்லை. என் அறிவியல், கணக்கு படிப்பு, எதையும் வள வளவென்றில்லாமல், கணக்கு நுணுக்கத்துடன்(arithmetic accuracy) படைப்புத்துறையில் கையாளும் பயிற்சியை அந்த காலத்திலேயே எனக்கு தந்துவிட்டது என்கலாம்..  அப்போது,தமிழ்த்துறைத்தலைவராக பேராசிரியர் ஜேசுதாசன் இருந்தார். மார் இவானியேஸ் கல்லூரியில் என் ஆங்கில ஆசிரியராக இருந்த டி.கெ.துரைசாமி(நகுலன்)யும்-அவர் அடிக்கடி ஜேசுதாசன் சாரைப்பார்க்க இங்கேயும் வருவார்,இங்கிருந்த ஜேசுதாசன் சார் அவர்களும் ன்து எழுத்தார்வத்தை  மேலும் மேலும் வளர்த்தவர்கள் ஆவார்கள். அத்துடன்  இங்கு பணியாற்றிய  பேராசிரியர்கள் சா.வே. சுப்பிரமணியம், அழகி சொக்கலிங்கம், வீரபத்திர செட்டியார், ஆங்கிலத்துறையில் என் ஆசிரியர்அய்யப பணிக்கர் ஆகியோர் மறக்க முடியாதவரகள். ஜேசுதாசன் சார் கம்ப ராமாயணம் போன்ற பழ்ந்தமிழ் இலக்கியம் மட்டுமல்ல, நவீன இலக்கியத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அக்காலத்தில் தமிழ் மாணவர் சங்கம் சார்பில் நடந்த கட்டுரைப்போட்டியில் பரிசுபெற்ற நான் அப்பரிசை கா.நா.சுப்பிரமணியம் அவர்கள் கையால்  வாங்கியது மறக்க முடியாத நிகழ்ச்சி. பிரபல தமிழ் இலக்கியவாதிகள் இங்கு வரவழைக்கப்பட்டு சொற்பொழிவுகள் நடக்கும். தொ.மு.சி. ரகுநாதன் ஒருமுறை இங்கு வந்திருந்தபோது சுந்தரராமசாமி அவருடன் வந்திருந்தார். அப்போதுதான் சுந்தரராமசாமி இலக்கிய உலகில் தடம்பதிக்கத்துவங்கியிருந்தார்.
இங்கே படிக்கும்போது கல்லூரி ஆண்டுவிழா மலர்களில் என்னுடைய படைப்பு  இடம் பெறுவதுண்டு. என்னுடையை ஆரம்பகால நல்ல சிறுகதைகளில் ஒன்றாக பேசப்படும் பதில் இல்லை!சிறுகதை இங்குள்ள ஆண்டுமலரில் தான் முதலில் வெளியானது. பொதுவாக பெரும்பாலான கதைகளில்,குறிப்பாக அந்த இளம் பருவத்தில், ஆண், பெண் பிரச்சனைகளைத்தான் சொல்வாங்க, ஆனால் அதிலிருந்து மாறுபட்டு,ஒரு சாலைவிபத்தில் சிக்கிக்கொண்ட ஒரு சிறுவனை மையமாக வைத்து எழும் பிரச்னையை சித்தரித்தந்தச் சிறுகதை பெரிதும்பேசப்பட்டது.
நான் சற்று சங்கோஜமான டைப் மாணவன். ஆனா அதேவேளை படிப்பு மட்டும் இல்லாம பல்வேறு விஷயங்களில் எனக்கு ஈடுபாடு இருந்தது. கலை, இலக்கியம், அரசியல் எல்லாவற்றிலும் ஈடுபாடு இருந்தது. இந்த கல்லூரியில் அதற்கெல்லாம் வாய்ப்பிருந்தது. நிறைய மகிழ்ச்சியைத்தந்திருக்கிறது. வீட்டிலிருந்து கல்லூரிக்கு அனேகமாக பஸ்சில்தான் வந்து செல்வேன். சில வேளைகளில் நடந்தும் வந்திருக்கிறேன்.
என்னுடைய குடும்பம் பெரிய குடும்பம். அப்பா ஒரு நிறுவனத்தில் வேலைபார்த்துக்கொண்டிருந்தார். . நாங்கள் பத்துபேர்களில் மூத்தவன் நான். அதனால் எனக்கு பொறுப்பு இருப்பதாக உணர்ந்தேன். எனக்கு கீழே உள்ளவர்கள் படிச்சுகிட்டிருந்தாங்க. நான்  படிச்சு நல்ல மார்க் வாங்கி பாஸாகி,  ஏதாவது வேலை பார்த்தால் அப்பாவின் சுமை குறையுமே என்று நினைச்சிருந்தேன். இன்னிக்குள்ள கேம்பஸ் இண்டர்வியூ மாதிரி அன்னிக்கு ஒண்ணும் கிடையாது. நான் பி.எஸ்சி படிச்சுகொண்டிருக்கும்போதே கேரளா அரசின் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதி வெற்றி பெற்றேன். வேலைக்கு வரச்சொல்லி உத்தரவு வந்தது. பி.எஸ்.சி பரீட்சை தேர்வு எழுதி முடித்த கையோடு நான் திருச்சூரில் போய் வேலையில் சேர்ந்தேன்.. விடுமுறைக்காலம் முடிந்ததும், பி.எஸ்சியில் நல்ல மார்க் இருந்ததால் அப்பா என்னை இன்ஜினியரிங் படிக்கக் கட்டாயப்படுத்தியதினால், அதன்பின்னர் இன்ஜினியரிங்க கல்லூரியில் சேர்ந்து நான்கு வருடங்கள் படித்தேன். (அங்கு படிக்கும்போது நான் எழுதி, இயக்கி, நடித்த என்ஜினீயர் என்ற தமிழ் நாடகத்திற்கு அனைத்திந்திய வானொலி நாடகப்போட்டியில் முதல் பரிசு கிடைத்தது என்பதையும் இங்கு குறிப்பிட்டாகவேண்டும்.)
இந்த பல்கலைக்கழக கல்லூரியை எடுத்துக்கொண்டால் மிகவும் பழமையானது.. 1866.ல் கட்டப்பட்ட இந்தக்கல்லூரி இன்னும் பழமை மாறாமல் புதுமைக்கும் இடம் கொடுத்து மிளிர்கிறது. இங்குள்ள இயற்பியல் துறையை அடுத்து வேதியியல் துறை, அதற்கடுத்து  மாணவிகள் வெயிட்டிங்க் ஹால் இருந்தது. அதனால் இந்த பகுதி எப்பவுமே கலகலப்பாக இருக்கும். மாணவர்களுக்கு மிகவும் பிடித்தமான இடம். மாணவர்களின் வீர தீர பராக்கிரமங்களை இந்த பகுதியில்தான் அதிகம்காணமுடியும்.  மாணவ, மாணவிகளின் ரொமான்ஸை தூரத்தில் இருந்து ரசிப்பதோடு நான் என்னை கட்டுப்படுத்திக்கொண்டேன். அழகான மாணவிகள் நிறைய பேர் என்னுடனும் படித்தார்கள். சிலரைப்பார்க்கும்போது அவர்கள் மீது மரியாதை மட்டுமல்ல, ஒன்றிரண்டுபேர்களிடம் ஆசையும் வந்திருக்கிறது. ஆனால் அந்த பதினெட்டு வயசு பிராயத்தில், வம்புதும்புக்களில் மாட்டிக்கொள்ள விருப்பமில்லாமல், உள் உணர்வுகளை மனதுக்குள் புதைத்துக்கொண்டேன். என்னுடைய முதல் நாவல் உதய தாரகையில் என் கல்லூரி கால நிகழ்வுகளும், நினைவுகளும் ஒரளவுக்குப் பதிவாகியிருக்கின்றன என்று நினைக்கிறேன். தரமான இலக்கியத்தில் எனக்கு அதிக ஈடுபாடு ஏற்பட அடித்தளமாக இருந்தது இந்த பல்கலைக்கழக் கல்லூரி என்றால் அது மிகையாகாது.
இன்று, இக்கல்லூரியில் 75-வது வயதை நெருங்கிக்கொண்டிருக்கும்போது நிற்கையில், வயது மீண்டும் 18 ஆனதைப்போல் தோன்றுகிறது. பெரிய கட்டுப்பாடொன்றும் இங்கே அன்றும் இன்றும் இல்லை.. மாணவர்களை அடக்குமுறைகொண்டு நடத்தும் பழக்கம் இல்லை. சுதந்திரம் இருந்ததால் படிப்பின் கூட அவரவருக்கு ஈடுபாடுள்ள எனைய துறைகளிலும் தம் திறமையைக் காட்டி முன்னுக்கு வர முடிந்தது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு நான்என்றுநினைக்கிறேன்.
கல்லூரியின் அருகிலேயே சட்டசபை, செயலகம்,வி.ஜெ.ட்டி ஹால், பல்கலைக்கழக செனட் ஹால்,  எல்லாம் இருந்ததால் அமைச்சர்கள்,அரசியல் தலைவர்கள், மட்டுமல்ல, கலை இலக்கியங்கள், ஏனையத்துறைகளில் பிரபலமானவர்களையும் நெருக்கமாய் பார்க்கவும் பழகவும் முடிந்திருக்கிறது. 

 தமிழ்ப்பாடத்தில் அதிக விருப்பத்துடன் இருந்ததால், என்னுடன் படித்த இயற்பியல் மாணவர்கள் என்னை கிண்டல் செய்வார்கள்.பேசாமல் தமிழ் மேஜரை எடுத்துப்படித்திருக்கலாமே!என்று. நான் சிரிப்பேன். ஒருமுறை எம்.ஜி.ஆர். அவர்கள் திருவனந்தபுரத்தில் நாடகம் நடிப்பதற்காக வந்திருந்தார். அவரை கல்லூரிக்கு அழைத்து பேச வைத்தோம். மறக்காமல் அவருடன் போட்டோவும்எடுத்துக்கொண்டோம். அதே எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சர் ஆனபின்னர், அவர் கையிலிருந்து, என் உறவுகள் நாவலுக்காக  ராஜா சர் அண்ணாமலைசெட்டியார் விருது வாங்கியதும் நான் சற்றும் எதிர்பார்த்திராத அனுபவம்.
அதுபோல் ஆங்கிலத்துறை பேராசிரியர் அய்யப்ப பணிக்கரின் வகுப்புகள் இனிமையானவை. அக்காலத்தில் இக்கல்லூரியில் ஆசிரியர்களாக பணியாற்றிக்கொண்டிருந்த இடற்பியல் பேராசிரியர் வெங்கடேஸ்வரன் சார், கேரளத்தில் பிரபலமான நாடகாசிரியர் என்.கிருஷ்ணப்பிள்ளை சார், விமர்சகர் குப்தன் நாயர் சார், சர்வோதயத் தலைவரும் புகழ் வாய்ந்த ஆங்கில கவிஞருமான ஜி.குமாரபிள்ளை சார் இவர்கள் முகங்களும் இங்கு நிற்கும் இந்த நல்லநேரத்தில் என்னில் நிறைகின்றன என்று மகிழ்ச்சியுடன் கூறினார் எழுத்தாளர்நீலபத்மநாபன்.
-- 
                                                   திருவட்டாறு சிந்துகுமார்
                                                        குமுதம் 17-10-2012