Wednesday, March 16, 2011

நீல பத்மநாபன் கவிதைகள் கர்ணாடக இசையில்

நீல பத்மநாபன் கவிதைகள்.………………. ராகம்

1) தூக் கம் ....... .(1966)........................... .நாட்டை
2) நெருப்புக்குச்சி (1967) கானடா
3)நிலை .............. (1967)................................ .ரஞ்சினி
4)? .. ............... (1967)............................... .மோகனம்
5)விமோசனம்.... (1973)............................... . ஹம்சநாதம்
6) )பூதக்கண்ணாடி.....(1993).................. அட்டனா
7) அபகரணம்.......... .(1973)............................ கல்யாணி
8) பக்கம்....... (1973)...................................கானடா
9) தேரோடும் வீதி....(1987)................... ஹமீர்கல்யாண
10) செக்போஸ்டுகள் (1973)................... சாமா
11)இறைஞ்சல்................(1993)..................... நாத நாம க்ரியா

1) தூக்கம்

ஜனனியின் கருப்பையில்
மார்ப்பின் கதகதப்பில்
கயிறு நுனி தூளியில்
கிரீச்சிடும் தொட்டிலில்
தந்தையின் அரவணைப்பில்
கோரைப்புல் பாயில்
சூரலிழைக் கட்டிலில்
எதிர்பாலின் கிளுகிளுப்பில்
வெல்வெட் மெத்தையில்
சேய்களின் ஸ்பரிசத்தில்
கோரைப்புல் பாயில்
கட்டாந்தரையில்
நா லு
பே ர்
தோள் தாங்கும்
பச்சை மூங்கில் பாடையில்
இடுகாட்டு வரட்டியில்
உய்விக்கும் நெருப்பில்
ஆறடி மண்ணில்
அந்தரீஷ வெளியில்

2) நெருப்புக்குச்சி

உருண்ட முனையில்
கந்தகச் செழுமை
குருதிச் செம்மை
பரந்த பரப்பில்
ரஸாயனக் கலவை
சிமிழின் சீற்றம்
அழுத்தி ஆழ்கையில்
அழிக்கும் செந்தீ
ஆக்கும் வெண் தீ
எரிந்து அடங்கையில்
புகையிழை
கரித்துகள்கள்
நூலிழை ் உயிர் லட்சங்கள்

3)நிலை

எழுத்தாணி மழுங்கியும்
சளைக்கவில்லை
எழுதாமல் இருக்கவும் முடியவில்லை
எழுதிய எழுத்துக்கோ
கணக்குமில்லை
எழுதாது அணைந்தவை
கொஞ்சமில்லை
சுவடியைத் தூக்கி நான்
அலையவில்லை
சுருள் நிமிர்த்திப் பார்க்கவோ
நாதியில்லை

4) ?

பிறவிக்கு நன்றி
பெற்றோருக்கு
வளர்ச்சிக்கு நன்றி
அவர்களுக்கே
கல்விக்கு நன்றி
ஆசானுக்கு
கலவிக்கு நன்றி
மனைவிக்கு
பதவிக்கு நன்றி
அரசுக்கு
பாசத்திற்கு நன்றி
உடன்பிறப்புக்கு
நட்புக்கு நன்றி
நண்பனுக்கு
அருளுக்கு நன்றி
இறைவனுக்கு
கொள்ளிக்கு நன்றி
குழந்தைக்கு
மிருத்துயூவுக்கு நன்றி
?


5) விமோசனம்

எழுதப்படாதிருந்தால்
களங்கப்படாதிருக்கும்
ஏடே
பாடப்படாதிருந்தால்
சேதப்படாதிருக்கும்
பாட்டே
உனக்கும்
எனக்கும்
இந்த ஜென்மத்தில்
விமோசனம்
உண்டா

6) பூதக்கண்ணாடி

ஊரை
உலகை
பூதக்கண்ணாடியில்
பார்த்தோம்
களித்தோம்
கண்ணாடி
பின் திருப்பியதும்
சுய முகங்களைக்
கண்டோம்
அப்பப்பா...
களிப்பெல்லாம்
போச்சு
கொந்தளிப்பு
கொதிப்பு
குதிப்பு
வெட்கம்
மட்டும்?

7) அபகரணம்

காத்திருந்தேன்
கள் மொந்தையுடன்
தேன் சுளையுடன்
நீ வந்தாய்
கள்ளையும்
தேனையும்
தந்து
ஆத்மாவை
அபகரித்துக்கொண்டாய்
பறிபோன ஆத்மாவை
நினைக்கவோ
நேரமின்றி
கள்ளிலும்
தேனிலும்
கரைந்துருகிப்போனேன்
கள் கசக்கையில்
தேன் புளிக்கையில்
ஆத்மாவைத் தேடினால்
கிடைக்குமோ
தெரியல்லே

8) பக்கம்

படிக்கப்
படிக்க
பக்கங்கள்
தீரவில்லை
படிப்பதை
நிறுத்தியதும்
பக்கங்கள்
தீர்ந்தன

9) தேரோடும் வீதி

இணைந்தவர்கள் கூட்டல்களாகி
கழந்தவர்கள் கழித்தல்களாகி
வாழ்க்கைப் பயணம்
தொடர்கையில்
கிரவுஞ்சப் பட்சியின்
விரக கீதமாய்
சிறகடித்து ஒலிசெய்யும்
நெஞ்சத்தடம்
சொல் ஏர்கள்
தாறுமாறாய்
உழுது மறித்திட
குருதித் துளிகள் தெறித்திடும்
யுத்தக்க்ளம்
அண்டம் கிடுங்கிட
ஆனந்த நர்த்தனம் ஆடிட
அகந்தை அசூயை
கோப தாபப்
புகழ்ப் பேராசைகளின்
கூர் முனைகள்
நசுங்கிச் சிதறிட
அஞ்ஞான இருளகற்றும்
மெய்ஞானப் பேரொளி
அஷ்ட திக் முகங்களில்
பூசிச் சிலிர்த்திட
ஆதித்த தேவனின்
காலத்தேர் சக்கிரங்கள்
நித்தம் நித்தம்
ஓடோடிக் கொண்டிருக்கும்
வீதியாம்
விதியதன் வீதி

10) செக்போஸ்டுகள்
ஊரில்லை வேரில்லை
மொழியில்லை வழியில்லை
மண்ணொன்றும்
உன்னை
மகனாய்க் கொள்ளவுமில்லை
பிறந்த பொன்னாட்டை
மூளியாக்கும்
செக்போஸ்டுகள்
வாயைத் திறக்காமல்
உனக்குள்ளே
கூனிக்குறுகி
சுய இரக்கச் சிந்தையில்
மறுகிப்போய்
நான் என்ற கல்லறையில்
அகம் என்ற சிலுவையில்
அடங்கிடும்
யக்ஞத்திலும்
தோற்றுப் போய்
புகலிடம் கிடைக்காது
ஆடி நடக்கும்
பாபாத்மா நீ

11) இறைஞ்சல்

குரல் நன்றாயிருக்கையில்
பாட்டை நிறுத்திவிடு
விரலுக்கு வீக்கம் வரும்முன்
வீணையை விற்றுவிடு
பரல்கள் சிதறும் முன்
சதங்கையை அவிழ்த்துவிடு
படுக்கையில் விழும்முன்
பாடையில் ஏற்றிவிடு


Recited by Sri Ramachandran in All India Radio, Thiruvananthapuram (broadcast in 1993)