Saturday, July 6, 2019

மண ஆண்டு

மண ஆண்டு

அம்மா அப்பா, தம்பி தங்கைகளுடன்
முதல் இருபத்தி ஐந்து ஆண்டுகள்....
பின் மனைவி மக்களுடன்
அடுத்த ஐம்பத்தி ஆறு ஆண்டுகள்...
இன்னும் தொடரவா விதித்திருக்கிறாய்
சர்வேசா...
3—7--2019

Saturday, May 11, 2019

குயில் நாதம்


குயில் நாதம்

முன்பெல்லாம் காலையிலோ மாலையிலோ
வெயிலின் வெப்பம் தணிந்த பொழுதுகளில்
காற்றினிலே வரும் கீதமாய்மென்மையாய்க்
காதினிலே வந்து வீழ்ந்துகொண்டிருந்த உன் சோக நாதம்
இப்போ சில நாட்களாய் நேரம் காலமின்றி
வைகறைப்பொழுது, சூரியன் உச்சியில் நிற்கும் வேளை,
மாலை மங்கி இருள் சூழ்ந்த நேரங்களிலும்
விடாமல் ஏகாந்த, சோகரீங்கார நாத இழையாய்
உள் புகுந்து, இதயத்தை வாட்டி வதைத்துக்
கொண்டிருக்கிறதே……… ஏன்…….…… ?
இன்னதென்றுச்சொல்லத்தெரியாத சோக வெறுமை
நெஞ்சகமெங்கணும் புகைமறையாய் நிறைந்து வழியும்
ஒருவித நிம்மதியின்மை….ஆற்றாமை
வீட்டில் கீழ் அறைகள்-குளியலறை, மேல்மாடி…..
எங்கும் விடாமல் தொடர்ந்துகொண்டிருக்கும்
உன் நாதரிங்காரம் வெறு யாரையும்
அலட்டுவதாய்த் தெரியவில்லையே……
அதைப்பற்றிப்பேசி அந்தரங்கத்தை
அம்மணமாக்கவும் தோன்றவில்லை……
உடல் உறுப்புக்கள் வலுவும் பொலிவும் இழக்க இழக்க..
உள்ளத்து உணர்ச்சிகள் அலைவிச்சுக்களாய் ஆர்ப்பரிக்க,
அந்திமத்தின் காலடியோசை நெருக்கமாய்க் கேட்கக் கேட்க….
இந்நாள் வரையுள்ள ஆயுளின்
இந்த இறுதி நாட்களில் பேரிடியாய்
அனுபவமாகும் உதாசீனம்……..
யாருக்கும் வேண்டாத அதிகச் சுமையாகிப்போனோமோ
என்ற மானசீக சுய வதைப்பு…… ..
போதுமின்ற அவனி வாழ்வு…..ஒரு நாள், ஒரு நொடி
முன்னாலாவது போனால்பொதுமென்று
அவஸ்தைப்பட்டுக்கொண்டிருக்கும் இத்தருணத்தில்
வா   வா ….   உன அழைப்பா கோகிலமே………?   
பிரிவாற்றாமை……அது விரகமென்றுத் தோன்றவில்லையே
வேறேதோ பாசப்பிணைப்பின் வெளியீட்டு வீறிடலா…....,
இல்லை, முன் ஜன்மாந்திர சங்கிலித் தொடர்பா……
வா  வந்துவிடு………இந்நாள் வரை அனுபவித்ததெல்லாம் போதும்..
இனியும் அவஸ்தைப்படவேண்டாம் ,உனக்கு நானிருக்கிறேன்
தம்பீ………தம்பீ…….…
திடீரென்று  உள்ளுக்குள்ளே …….ஓர் மின்வெட்டு……..
அக்கா……….நீயா…………..?
அப்போது தனக்கு ஐந்து வயதிருக்குமா
.வெறும் இரண்டு வயதுக்கு மூத்த ஒரே அக்கா
தெருவில் போகுமிடங்களிலெல்லாம் கைப்பிடித்து
தம்பி தம்பியென பாசமுடன், பெருமையுடன் கூட்டிச்செல்லும் அக்கா
பாடம் படிக்கவில்லையென்றோ, குறும்புத்தனமென்றோ
அப்பாவோ அம்மாவோ அறைய வந்தால்
தம்பி மீது அறை விழாதிருக்க அவள் சிறிய பாவாடையை
கேடையமாய் விரித்தவாறு இடையில் வந்து விழ
சில வேளைகளில் அறைகளை அவளே வாங்கிக்கொள்ள….…..
பிஞ்சாயிருக்கையிலேயே எல்லோரையும்
சோகக்கடலில் ஆழ்த்தி காலத்திரையில் நட்சத்திர
ஒளிப்புள்ளியாய் மறைந்து விட்ட ஒரே அக்கா….
பித்ருக்களை நினைக்கையிலும், அல்லாத போதும்
பிரக்ஞை வெளியில் வெளிச்சம் அதிகமில்லா
ஏதோ ஒரு மூலையில்அந்த களங்கமில்லா
களையான அழகு முகம்……..
இப்போ……..எல்லா இகலோக இம்சைகளிருந்தெல்லாம்
நிரந்தரமாய் விமோசனம் தந்தருளும் அபயக்குரலாய்-அழைப்பாய்…..
இதோ………மீண்டும் அதே அன்பு நாதம் மிக மிக அருகில்….
இடைவெளி இல்லாமல்…..தம்பீ…..தம்பீ…………..

   8-3-2019 (உலக மகளிர் தினம்)                       நீல பத்மநாபன்

தீ நாக்கு


தீ நாக்கு
பெரிய சிறிய மரங்கள் மட்டுமல்ல
புல்பூண்டுகளையும் சுட்டெரித்து
வெந்தணலாக்கியும் அடங்காத
காட்டுத்தீ…….
எதிரில் மாட்டிக்கொண்டவர்களை
சுட்டுப்பொசுக்கியும் நிற்காது,
வக்கணைகளையும் அபாண்டங்களையும்
வாய்க் கூசாது சரமாரியாய் வாரி இறைத்து,
அகராதி காணா கெட்ட வார்த்தைகளையும்
கூரம்புகளாய்ப் பாய்ச்சி
ஆர்ப்பரித்துக்கொண்டே இருக்கும்
……………………………………………………………………………..
   நீல பத்மநாபன்


அம்மா..அம்மா


அம்மா….அம்மா….

இன்று தை அமாவாசை…….
பதினெட்டு ஆண்டுக்களுக்குமுன்,
இப்படீயொரு தை அமாவாசை நாளில்தானே
எங்களையெல்லாம் விட்டுப்பிரிந்து சென்றாய்….
உனை நினைக்கையில்,……எதைச்சொல்ல?, எதைச்சொல்லாமல் விட?
அன்றுபோல்தான் இன்றும் நெஞ்சில் மலைப்பு………சோகத்தின் நிழல்கள்….,, ..!
இணைப்புக்கோடுகள் போடத்தெரியாத, இயலாத
மின்னி மறையும் கோலப்புள்ளிகள் நெஞ்சம் நிறைய…….. ……;
சமையல் கியாஸ், குக்கர், மிக்சி, கிரைண்டர், சலவை யந்திரம்
வகையறாக்கள் இல்லாத நாளில்
வீட்டில் நிறைந்து வழிந்த குழந்தை குட்டிகளின்
பல்வேறு ருசிபேதங்களுக்கேற்ப ஆக்கி விளம்ப,
அணையா வேள்வித்தீ ஜ்வாலைபோல்
சதா எரிந்துகொண்டிருக்கும் அடுப்படித் தீக்கொழுந்தொளியில் 
ஜ்வலிக்கும் அம்மாவின் முகம்….,
அடுப்பில் பாத்திரம் பண்டங்கள் காய
காய்கறிக்காரி வாறாளா என்ற தேட்டமுடன்
அடுப்படிக்கும் தெருவாசலுக்குமா ஓட்டமும் நடையுமா
பரபரக்கும் அம்மா….
இடையிடையே அம்மிமுன் விரைந்து
மஞ்சள், முளகு, கொத்தமல்லி, சீரகம் என பசரக்குப்பொருட்களை
அரைத்துக் குழம்பாக்கும்  அம்மா……
சூரியன் வானுச்சியில் வந்து, முற்றத்தில் நனைந்த
துணிகளை உலர்த்த கட்டியிருக்கும் கொடியில் வெயில் வீழ்கையில்
அழுக்குத்துணிகளை சோப்பிட்டு அடித்துத் துவைக்கும் அம்மா……. 
இடையில், தூளியில் கிடந்து கைகால்கள் அடித்து
அழுது ஆர்ப்பாட்டம் பண்ணும் தம்பியையோ, தங்கையையோ
தூளி ஆட்டி தாலாட்டு பாடிச் சீராட்டும் அம்மா….
சாமப்பொழுதுகளில் பள்ளிப்பாடங்களை
படித்துவிட்டு அயர்ந்து தூங்கையில்,,
எங்கள் காதுகளில் ஒலிசெய்யும்கடபடா சத்தம்…,
அடுத்த நாள் காலைஉண்டிக்காக
ஆட்டுரலில் மாவரைக்கும் அம்மா.....
கடைசி மூச்சு வரை ;  ,
வாழ்வில் எதிரிட வேண்டிவந்த
கொடுமையான சோதனைக் கட்டங்களிலும்
கடுமையான,வேதனைகள், ரோதனைகளையெல்லாம்
உள்ளுக்குள்ளையே புதைத்து,யாரையும் கரித்துகொட்டாமல்,
பிள்ளைகள் எங்களிடம் தன்னம்பிக்கையை விதைத்து
சுப எதிர்பார்ப்புடன், தளராது வாழ்ந்து  காட்டிய அம்மா
                                  நீல பத்மநாபன்..

மூட மதி


  மூடமதி
வாயில் வெள்ளிகாரண்டியுடன்
பிறந்தவனில்லை அவன்……….
உடன் பிறப்புக்கள், தெருவாசிகள், ஊரக்காரர்களின்
எதிர்மறைச்சிந்தனைகள், செயல்கள், மோதல்களின்
இடையில் வாழ்ந்தான், வளர்ந்தான்…….
அடிபட்டு, கடிபட்டு, முட்டி மோதி
தனக்கென சுயம்புவாய் ஓர் ஆளுமை
காலத்தின் கிரமத்தில் அவனிடத்தில்
ஆழ்ந்திறங்கியிருக்கவேண்டும்
அதுவும், நின்ற இடத்திலேயே தேங்கிவிட விடாமல்,
மீண்டும் மீண்டும், காலத்திற்கு,,பருவத்திற்கு ஏற்ப
புதுப்பித்துக்கொள்ளும் முயற்சிகளை, பயிற்சிகளைத்
தொடர்வதிலும் பின்னடையவில்லை…..
இவ்வாறெல்லாம்i இந்நாள்வரை கற்றுத்தெரிந்துத்தெளிந்தவை,,
சம்சார சாகரத்திலிருந்து கரையேற
அபயக்கரம் நீட்டாமல் கைவிட்டுப்போனது ஏனோ……………….?

                                                       நீல பத்மநாபன்