Tuesday, August 14, 2018

நடை


                                       நடை

சின்னாட்க்களிலிருந்தே எந்த மழையிலும் வெயிலிலும,
கைநழுவிப்போய்விடாமல்
கூடவே வந்துகொண்டிருக்கும் பழக்கம்
எப்படி வந்தது என்றுத் தெரியவில்லை,
ஏன் வந்தது என்றும் புரியவில்லை….,
முன் மாதுரியும் ஞாபகத்தில் இல்லை 
வெயிலின் வெப்பம் தணிந்துகொண்டிருக்கும்
மாலைப்பொழுதுகளில் வீட்டில் நாலு சுவர்களுக்குள்
அடைந்துக்கிடக்கவிடாது வெளியில் குதிக்க
வெம்பும் மனம்…..
பால பருவத்தில், கூட்டாளிகளுடன்
தெருவில், பக்கத்துக் கோயில் குளங்களைச்
சுற்றியுள்ள காலி இடங்களில் மட்டுமல்ல சற்று தொலைவிலிருந்த
விளையாட்டுப்பூங்காக்களீலும் ஆடிக்களித்த,
தெரியாத சந்துபொந்துக்களைத் தெரிந்துகொள்ள
நடமாடித்திரிந்த, சதா துறு துறுவென்றிருந்த கை கால்கள்,
தற்போது காலத்தின் கோலத்தில் களைத்துத் துவண்டுவிட்டிருந்தும்,
மாலை நேரங்களில் எந்த இடி, மின்னல், மழையிலும்
வெளியேறி, நடந்து செல்ல வெம்பும் மனம்…..
வாகனங்களை நாடுவதில் நாட்டமில்லை………,
தெருநடையில் நின்றவாறு இரு பக்கங்களிலும்
பார்வைசெலுத்த  தலைத்திருப்புகையில்…..
கிர்ரென்று தலைக்குள் கிறுக்கம்,…கண்ணீர் திரையில்..
மங்கிய பார்வையிலும் நடைப்பாதையில்
கட்டிநிற்கும் முந்திய நாள் பெய்த மழைநீர் குட்டைகள்…,
அடுத்து, குவிந்து கிடக்கும், சின்ன பெரிய மூட்டைகளுக்கு
உள்ளையும் வெளியிலுமாக குப்பைக்கூளங்கள்…..,
அவற்றிலிருந்து ஒழுகி இறங்கி
பாதையில் படரும் கழிவுநீர்…..துர்நாற்றம்
கழிவு நீரில் கால்படாமல் காலடி வைக்கும் அப்பியாசத்தின் போது,
மேலே,தலையிலும் கண்ணிலும் மோதும்
பக்கவாட்டு பாழிட மரத்து கிளைகள், இலைகள்
எங்கே கால்தடுமாறி விழுந்துவிடப்போகிறோமோ…,
செருப்பிலிருந்து வெளியில் நழுவும் பாதங்கள்… …
சற்று நடந்ததும், நடைப்பாதையை கார் பார்க்காக்கி
கார்களின் வரிசை, இடையிடையே
முச்சக்கிர, இருச்சக்கிர வாகனங்கள்
சற்று நீங்கி, சென்ற மாத அடைமழையில், காற்றில்
ஒடிந்து விழுந்து அலங்கோலமாய் கிடக்கும்
மரக்கிளைகள் நடைப்பாதை முழுதும்
கால் வைக்க இடமில்லையென வீதியில் இறங்கும் முன்,
கண்ணை குருடாக்கும், வாகனங்களின் ஹெட் லைட் ஒளிவீச்சுக்கள்.. 
சில அடிகள் நடந்து வீதியை கடக்கும் ஸீப்ரா கோடுகளில்
ஓரம் சேர்ந்து, காத்து நின்று பச்சை விளக்கு வந்ததும்
வீதியை கடக்க முனைகையில், போக்குவரத்து சட்டங்களை
காற்றில் பறத்தி விரைந்து வந்துகொண்டிருக்கும் வாகனங்கள்..
எதிர் முனையில், தனக்கு சம்பந்தமில்லாதது என்ற தோரணையில்
பார்த்து நிற்கும் ட்ராபிக் போலீஸ்……
இதைப்பற்றியொன்றும் அலட்டிக்கொள்ளாமல்
அங்குமிங்கும் விரைந்து கொண்டிருக்கும் ஜனங்கள்
நெஞ்சை சுட்டெரிக்கும் கனல் பொறிகள் சற்றேனும் ஆறாத
என வெளியே விச்ராந்தியாய் நடக்க வந்தால்……
கனலை கொழுந்து விட்டெரிய செய்யும்
எண்ணைதுளிகளாய் இந்த வழியோரக் காட்சிகள்……!
  ..

                              நீல பத்மநாபன்
.
   


Friday, May 25, 2018

எண்பது

நினைத்தால் நெஞ்சில் நிறையும் வியப்பு
எண்பது ஆண்டுகளாகிவிட்டனவா
நேற்றுபோலிருக்கிறது, பாட்டியின் ஆறுதல் தேறுதலுக்கொன்றும்
செவிச்சாய்க்காமல் அழுது வழிந்துகொண்டிருந்த- அப்போ, .
மூன்று வயதிருக்குமா, சிறுவனாய் அடுத்தத்தெரு
குடிப் பள்ளிக்கூடத்திற்கு எண்ணும் எழுத்தும் கற்க
போன தினங்கள்பிறகு, பக்கத்து ஆரம்பப் பள்ளியிலும்,
சற்றுத் தொலைவில் ஆற்றங்கரையிலிருந்த
உயர்நிலைப்பள்ளியிலுமாக, பதினைந்தாவது
வயதில் பத்தாவது தேறுவதுவரையுள்ள
ஒன்பதாண்டுகால பள்ளிவாழ்க்கையில்தான்
எத்தனை எத்தனை நிகழ்வுகள் நினைவுகள்
எல்லாமே நேற்றுபோல்…..
அடுத்து, நான்கு உள்ளூர் கல்லூரிகளில் ஒன்பதாண்டு காலம்..…
மறதியில் மறைந்திடாத நண்பர்கள், ஆசிரியர்கள்
கட்டுப்பாட்டை மீறத்துடித்த இளமை சகஜ-
புள்ளிக்கு வெளியே மீள முனைந்த கோலக்கோடுகள்….
உத்தியோக காண்டம்…., இல்வாழ்வு…..
மனைவி மக்களென்ற சம்சார சாகரத்தில் முழுகி
என்னதான் முயன்றும் கரையேறத் தெரியாது, இயலாது
குழைந்து துவண்டு ஒய்வை நாடும் தேடும்
கைகள் கால்கள்  ஒவ்வொரு உறுப்புக்களும்…….….
பிறவிக்கடனை யாவும் செய்துவிட்டோமென
வெளியில் ஏற-வெளியேற உள்ளையும் உடலையும்
பாகப்படுத்த  கட்டுக்களையெல்லாம் உதற முனைகையில்
நங்கூரமாய் பிடித்து நிறுத்துவது எதுவெனத்தெரியாத மாயை……….
சின்னாட்களிலேயே ஒழியாத ஆவியாய் ஊனில் உயிரில்
குடியேறி கண நேர ஆனந்தம் அளிப்பதாய் பிரமை காட்டி அல்லும் பகலும் அனவரதமும் வாட்டி வதைத்துக்கொண்டிருக்கும்  ஏடும் எழுத்தும்………
அவை தானோ ,சுயத்தை கண்டுணரும் ஸ்வதர்மம்-சொந்தக்கடன்?
அவற்றையும் உதறிவிட முனைந்தபோதெல்லாம்
பிஞ்சு பருவத்திலிருந்தே அருகிலும் அகலத்திலும்
நேரடியாய் கண்டுணர்ந்த இறுதி நொடியின் காட்சிகள்….நினைவுகள்….
ஒருவேளை, இதை அடையத்தானே..,பிறகு, ஏனிந்த தத்தளிப்பு………பயமாஅனாயாசமாய் நிகழாதா என்ற எதிர்பார்ப்பா….…?
             நீல பத்மநாபன்.
 

       ,


Monday, April 9, 2018

முகங்கள்


  முகங்கள்
சின்னாட்களில்,  எண்ணும்  எழுத்தும்  கற்று,
கூட்டி வாசிக்கத் துவங்கிய காலையிலேயே
பற்றிக்கொண்ட வழக்கம், செய்திப் பத்திரிகை
கையில் கிடைத்தால்- வீட்டிலானாலும்
முடி திருத்தச் செல்லும் சலூண் உட்பட்ட வெளியிடமானாலும்
தன் வரிசைமுறை வரும் வரை காத்திருக்க வேண்டிய கட்டாயம்
வந்தால் பேயாய்ப் பற்றிக்கொள்ளும் மனச்சோர்விலிருந்து குதறிவிலகி
வெளியேறி வெறி பிடித்தவனாய் பாய்ந்தோடி விடுவதிலிருந்து
சித்தத்தை பிய்த்து விலக்க, செய்தி பத்திரிகையில்
தஞ்சமடைகையில்………..முதலில் படங்கள்- சினிமா விளம்பரங்களில்
நடிகர் நடிகைகளின் கவர்ச்சிப்படங்களுக்குப்பின்னர்
கவனத்தைக் கவரும் ஆங்காங்கே தென்படும் சின்னச் சின்ன
புகைப்படங்கள்- நீத்தோர் நினைவு முகங்கள்…..பார்ப்பதில் ஒரு குறுகுறுப்பு…..
வயசேற ஏற பத்திரிகைகளில் அலசப்படும்
சமூக அரசியல் பிரச்னைகளில் முழுகும் போதும்
நினைவஞ்சலி படங்கள், முந்தைய நாளில் காலமாகி,
தகன ,இடம், தேதி, நேரம் பற்றிய தகவல்களுடனான
இறப்புச்செய்திப் புகப்படங்களை பார்க்கும் வழக்கம்..
தெரிந்தவர், தெரியாதவர், இளையவர், முதியவர், உற்றார், உறவினர், நண்பர்கள், அல்லாதவர், ஆண்கள், பெண்களின் முகங்கள்……………
மனதில் நிறையும் சோகமுடன், .சிலரின் மறைவில் துக்கம் விசாரித்து,
அனுதாபம் தெரிவித்து வீட்டிலும், மயானத்திற்கும்
போகும் பொருட்டு, பத்திரிகை கையிலெடுத்தால்
முதலில் புரட்டுவது இந்த பக்கமே யந்திர கதியில்………
அனேகமாய் எல்லா முகங்களிலும்  ஒருவித வேதனை, விரக்தி..,
வாழும் போது புகைப்படத்திற்காக மூச்சை அடக்கிக்கொண்டு
நின்றதினாலா.., இல்லை இப்போது இந்த பக்கத்தில் பார்ப்பதினாலா……?
சில நாட்களில், பொது இடங்களில் விபத்தினாலோ, ஆஸ்பத்திரியிலோ
தெரிந்தவர் யாரும் பக்கத்தில் இல்லாத நேரத்தில்
கடைசி மூச்சை விட்டவர்களின் முகங்களும்-சவக்கிடங்கில்
கிடப்பதாய் உற்றார் உறவினரை தெரிவித்து தென்படுவதுண்டு….
உயிர்க் களை இழந்த முகங்கள்……வாழ்வெனும் நாடகத்தில் ஒருமுறை வரும்- திரும்பி வராது சென்று மறைந்துவிட்டவஸந்த ருது…
இலையுதிர் காலக்காற்றில் ஆடி உலர்ந்து நிற்கும்
பருவத்திலும் நாள்தோறும் இந்த முகங்களின் இடையில்
தேடுவது எந்த முகத்தை?நடைப்பிணமாகி விட்ட சொந்த முகத்தையா…….?
             நீல பத்மநாபன்


,       


காதல் தினம்


     காதல் தினம்

இரவில் அலட்டும் துர்சொப்பனங்கள்,  
புள்ளினங்கள் பள்ளியெழுச்சி பாட
மலரும் இளம் காலை பொழுதிலும்,
நல்லவர்களாய் வாழ்க்கை நாடகத்தில் வந்துசேர்ந்து, பின் பொல்லாதவர்களாகி பொல்லாங்குகளை
விஷவித்துகளாய் விதைத்தவர்களின்
தீய நினைவுகளாய் தொடர்வது
முன்பெல்லாம் என்றோ ஒரு நாள்……….
என்றும் நிகழ்வதாகிவிட்ட இன்றைய நாளிலிருந்து
விமோசனம் வராதா என ஏங்கித் தவித்துக்கொண்டிருக்கும்
வேளையிலல்லவா உதயகிரியில் மெல்ல உயர்ந்து
ஊர்ந்திறங்கி அருகில் வந்து குளிர் தென்றலாய்
இதழ் பதித்து துயிலெழுப்பியிருக்கிறாய்……….!
இளமையும் வலிமையும் பொங்கி வழிந்துகொண்டிருந்த நாளில் , மங்கைமார்களின் கடைக்கண் பார்வைச்சரங்களை
எதிர்கொள்ள துணிவின்றி ஒதுங்கிப்போன கூச்ச குணம்….
அந்நாள் வரை பங்கம் வராது கட்டிக்காத்த பிரம்மசரியத்தை,
இல்லறத்தை நல்லறமாக்க படி தாண்டி வந்த
பத்தினியின் பாதத்தில் சமர்ப்பித்தும்,
சண்டை போடவே சரியாக இருந்த நேரம்..
மரத்துப்போய்விட்ட, மிஞ்சியிருந்த
அற்பம் சொற்ப ரொமாண்டிக் உணர்வுகள்….
பார்வைச் சரங்களை எதிர்கொள்ளும் துணிச்சல் வந்த நாளில்
பாராமுகங்களாக கடந்துபோயினர்
தப்பித்தவறி பார்த்தவர்கள்- சம, அதிக வயதினரும் கூட
தாத்தாவென அழைத்து தம் இளமையை
நிலை நாட்டினர், அன்புடன்……………………

நீல பத்மநாபன் (14-2-2018- வாலண்டியன் தினம்)
  , 

  





நம்பிக்கை


                      நம்பிக்கை
  புத்தக விழாக்களுக்குச் சென்றால்
  வாங்க வருபவர்களைவிட
  விற்க வருபவர்களே அதிகம்..
  கதை கவிதை அரங்கங்களுக்குச் சென்றால்
  கேட்க வருபவர்களைவிட
  கதை கவிதை வாசிக்க வருபவர்களே அதிகம்...
  மனபாரங்கள், எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றங்களையெல்லாம்
  முறையிடலாமென்று வந்தால்
  கேட்பவர்களைவிட முறையிடுபவர்களே அதிகம்...
  வேறுவழி தெரியாமல்
    பக்தி யோகத்தில் கடைசிப்படியெனத்தெரிந்திருந்தும்
  உன்னை நாடி வ்ந்து அடைக்கலம்...
    அதோடு, பகல் நேரம் பூரா பகலவனின்
  வெளிச்சம் வெயில் வெப்பத்தின் கூட
  சுட்டெரிக்கும் தீ நாக்கின் வாக்கு,
    போக்குகளின் இம்சைகள்...
  விம்மும் நெஞ்சுடன் தான்
  கரடு முரடான குண்டும் குழியும் கொண்ட
  இருளும் வெளிச்சப்புள்ளிகளும் இரண்டற கலந்த
   பாதைகள் நடந்து உன்னிடம் அடைக்கலம்....
     சின்னாட்களில் அதைத்தா இதைத்தா என்றெல்லாம்
      வேண்டியதைப்போல்
  பின்னாட்களிலும் பட்டம் தா, பதவி தா
 என்றெல்லாம் யாசிப்பது கீழான இறைஞ்சல்....
  எது தகுதியோ அதைச்செய்..,
  இல்லையேல் உலக நன்மையை வழங்கு..
  -இதெல்லாம் கூட தேவையா....?
  அவனின்றி அணுவும் அசையாது...’,
  நடப்பதெல்லாம் நன்மைக்கே
  இந்த தாரக மந்திரங்கள் போதாதா ,
  தனி பிரார்த்தனைகள், வேண்டுதல்கள் வேறு வேண்டுமா........?
      முன்னால் நின்ற ஒரு சிலரில்
  ஒரு முகம் முன்பு எப்போதோ
  கண்டு மறந்தது போல் ஒரு மாயத் தோற்றம்...
  ஒரு குறு நகை அரும்புகிறதா....
  நீண்ட அவர் கரத்துடன் தன் கரமும்
  ஸ்பரிசித்து திரும்பியதும்
  நெஞ்சில் நிறையும் நிம்மதி....                            நீல பத்மநாபன்