Tuesday, August 11, 2020

ஏனோ.....

சென்ற சில நாட்களாக
நிசிகளின் நடு யாமங்களில் 
நித்திரையின் இடைவெளியில்
காலத்தில் கரைந்த பின்னர், 
தான் சதா பார்த்துப் பழகும்
இந்த படுக்கை, அறை, வீடு, வெளியெல்லாம் 
எப்படியிருக்கும் என்ற வினோத கற்பனை……. 
 நாளொன்றாகும் முன் அணிந்திருக்கும் ஆடைக் களைந்து 
புத்தாடை கொள்ள 
ஆர்வம் கொள்ளும் மனமே, 
ஆண்டாண்டுகள் உருண்டோடி 
காலப் பழக்கத்தில் பழுதுகள் நேர்ந்த, 
கூண்டைக் களைந்து ”வெளி” யில் ஏற’ 
அவசமா…..இல்லை..அச்சமா…….…….. 

 நீல பத்மநாபன் 19-7-2020

Thursday, May 21, 2020

விளக்கேற்ற வந்தவள்


நேற்று
அவன் பிறந்து வளர்ந்த வீட்டில்
தனியாக பூஜை அறை இல்லை…..
ஆனால் எந்த இடி மின்னல் மழையாக இருந்தாலும்
ஒளியும் இருளும் சங்கமிக்கும் மூவந்திப்பொழுதில்
அம்மா தெருநடையைப் பெருக்கி,
தண்ணீர் தெளித்து அலம்பிவிட்டு
வீட்டு வாசல்படியையும் நீரால் கழுவியபின்
நடுக்கூடத்தில் சுவரோரத்தில் கிழக்குப்பார்த்து
தேய்த்து மினுக்கி வைத்திருக்கும் குத்துவிளக்கில்
திரியிட்டு எண்ணை விட்டு குங்கும பொட்டிட்டு
நெற்றியில் குங்குமமோ, திருநீறோ துலங்க
நாம ஜெபம் செய்தவாறு விளக்கேற்றுவாள்
கொல்லையிலிருந்து செக்கச்சிவந்த செம்பருத்திப்பூவொன்றை
பறித்து வந்து விளக்குக்கு கிரீடமாகச் சூடுவதற்கும்
ஒரு நாள்கூட அம்மா மறந்ததாக கண்டதில்லை
குத்துவிளக்கின் இதமான மஞ்சள் நிற மங்களப் பிரகாசம்
ஒளி பரப்பும் முன் கண்கூசும் மின் விளக்குகளை
வீட்டில் யாரும் போடுவதில்லை….
அந்நேரத்தில் பாட்டியும், வீட்டில் எங்கிருந்தாலும்
கை கால் முகம் அலம்பி நெற்றியில் விபூதியுடன்
திருவிளக்கை வழிபட வந்துவிடத் தவறுவதில்லை
வீட்டில் விளக்கு வைக்கும் அந்திப்பொழுதில்
யாரும் முடங்கி கிடப்பதில்லை…..
தெருவில் மூவந்திப்பொழுதில் விளக்கேற்றாமல்
இருள் படர விட்டிருக்கும்  வீடுகளைப்பற்றி
அங்கே மூதெவிதான் குடியிருப்பாள்,
சீதேவி இறங்கிப்போயிருப்பாள்…”
சந்தேகமின்றி திடமாக சொல்லுவாள் பாட்டி……

இன்று  
பூஜை அறை குத்துவிளக்கைக் குனிந்து நிவர்ந்து
ஏற்ற இயலாதென்று அவள் படுக்கை அறையில்
மேஜைமீது சாமிப் படங்கள், விக்கிரகம்..
மின்னும் வெள்ளி விளக்கு..
காலையில் அவள் தன் வெள்ளி விளக்கை
ஏற்றி வழிபடுவதோடு சரி….,
காலையிலிருந்து வீட்டுவேலைகள் செய்த களைப்பு,
ஓய்வுக்கு இதுதான் தக்க நேரமென்று
 மாலைப்பொழுதுகளில் படுக்கையில் சரணடையும் அவள்
துணைக்கு, தொலைக்காட்சி மெகா சீரியல், ஸ்மார்ட் போன்
காலையில், குளியலுக்குப்பின், பூஜைஅறை குத்துவிளக்கை ஏற்றி
அதன் முன் பீடத்தில் அமர்ந்து சற்று நேரம் வழிபடாமல்
உணவு புசிப்பதில்லை அவன்…..
இருள் படரும் அந்திப்பொழுதுகளிலும், அவனே, நாள் தவறாமல்
பூஜை அறை குத்துவிளக்கை ஏற்றிக்கொண்டிருந்தான்……
கண் மூடி எங்கும் நிறைந்த பரம்பொருளை தியானிக்கையில்
சில வேளைகளில், “இன்றுக்கு வர வழித்தெரியாமல்,
நேற்றிலேயே வீற்றிருக்கிறாயா….—அந்தரங்கத்தின் கேள்வி….
கூடவே, அம்மா விளக்கேற்றும் காட்சி
பாட்டி சொல்லும் சொற்களும்..…….

நீல பத்மநாபன்    
8—3—2020 (மகளிர் தினம்);  10—5—2020 (அன்னையர் நாள்)
      


Friday, April 24, 2020

கொறோணா காலத்தில் வந்த பிற்ந்த நாள்


காலம்  அதன் பாட்டுக்கு தொடரும்  பயணத்தில்
சமய சந்தர்ப்பம் தெரியாமல் இன்றய தினத்தில்  
வந்துவிட்ட பிறந்த நாள்……...
நரனாய் இப்புவியில் பிறவியெடுத்து
எண்பத்திரண்டு ஆண்டுகளா…..?
ஏழெட்டு ஆண்டுக்கள் முன்னாடியே
இளம் காலைப்பொழுதுகளில் படுக்கையிலிருந்து
எழுந்த நேரத்தில் காலைகடன்களை
துவங்குவதிலிருந்து, இரவு நேரம் சென்று,
மீண்டும் படுக்கையை சரணடைவது வரையிலும்  
அன்றாடக் கடமைகளைச் செய்ய
வயோதிக சகஜ, உள்ள உடல் உபாதைகளுடன்
மல்லிடவேண்டிய நிலைமை….
போதுமின்ற அவனி வாழ்வு என்ற
விளிம்பை எட்டிவிட்டிருந்த தினங்கள்……..…..…..
காய்ச்சிக் கலக்கி தீவனம் போடுபவளுக்கும்
சுமையாய்ப் போனோமே என்று தெரியத் தெளி
உள்ளுக்குள் உருகி, செய்வதறியாது திக்கித் திணறி
நாட்களை நகர்த்திக்கொண்டிருக்கையில்
இந்த கோவிட்19-ன்- கொண்டாட்டம் வேறா…..!……..
தேசம் நாடு பேதமின்றி கொத்துக் கொத்தாய்
மனித உயிர்களை காவு கொள்ளும் செய்திகள்……
வானொலியில், தினத் தாட்களில், தொலைக்காட்சியில்
இன்று சாவு ஒரு லட்சத்தி அறுபதாயிரத்தை
தாண்டிக்கொண்டிருக்கிறதாம் உலகில்….….
நோய்க்கொடுமையில் அவதியுறுவோர்
இருபத்திமூன்று லட்சத்துக்கும் மேலே….
நமது இந்நிய நாட்டில் ஐந்நூறைத் தாண்டிவிட்ட இறப்புகள்… …
பாதிக்கப்பட்டோர் பதினாறாயிரத்துக்கும் மேலே..
இன்னுமின்னும் மேலே மேலே
வளர்ந்துகொண்டிருக்கும் பயமுறுத்தும்
புள்ளிவிவரக் கணக்குகள்……
யாரும் வெளியே போகாதீர்-குறிப்பாய் வயோதிகர்கள்அறிவிப்புக்கள்
இங்கே வீட்டில் கிழவனும் கிழவியும் மட்டும்
குழந்தைகள் எல்லாம் வெளியூர்களில்….
வீட்டு வேலைக்கு உதவிசெய்ய
வந்துகொண்டிருந்த வேலைக்காரியும்
அவள் வீட்டைவிட்டு வெளியே
வரமுடியாமல் நின்றுவிட்டாள்
கொரோணா காலத்திற்கு முன்னாடி
ஆட்டோவில் சில நாட்களுக்கொருமுறையாவது
மாலை நேரங்களில் வெளியேபோய்
மருந்து, பழம் என்றெல்லாம் வாங்குவது இப்போ அசாத்தியம்……..…
காய்கறிகள் வாங்க வெளியே போகும் வீட்டுக்காரிக்கும் தடை….
அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்புகொள்ள
பத்திரைகளில் வந்திருந்த தொலைபேசி எண்களை
மாறி மாறி தொடர்புகொண்டபோது……சிலர் உதவினார்கள்
உதவி செய்ய வந்துகொண்டிருந்தவனின் ஸ்கூட்டர் பறிமுதல்..
அதைத் திரும்பப் பெற பெரும் பாடாகிவிட்ட பின்
யாரையும் மீண்டும் தொந்தரவு செய்யத் தோன்றவில்லை…….
நாகம் தீண்டியவன் தலையில் இடியும் வீழ்ந்ததுபோல்
பழுது பார்க்க எடுத்துச் சென்ற வாஷிங் யந்திரத்தை
சரி பண்ணிய பின் திரும்ப வீட்டுக்குக் கொண்டுவர
போலீஸ் அனுமதி வழங்காததால்
குனிந்து நிமிர்ந்து துணி துவைக்கும் வேலை வேறு புதுசாய்…!  .
நீண்டுகொண்டிருக்கும் லாக் அவுட் காலம்
தனித்திருக்கவும் விழித்திருக்கவும் மெனக்கெடாத
ஆயுள் ஆரோக்கியத்தைவிடவும்
பொருளீட்டல், உட்பட்ட லௌகீக ஆசை அபிலாஷைகளுக்கு
முக்கியத்துவம் கொடுப்பவர்களின் நாடுகளில்
ஏறுமுகமாயிருக்கும் கொரோணா சாவுகள், நோயாளிகள்….
இந்த லட்சணத்தில் நாடகத்தின்
உத்வேகமான உச்சகட்டக் காட்சியின்போது
பொருத்தமில்லா அசட்டுப் பாத்திரமாய் காட்சி உணர்வின்றி
மேடைக்கு வந்துவிட்ட பிறந்த தினம்--
மகிழ்ச்சியில்லா திரும்பி வருகை …!..
சொல்லாமல் கொள்ளாமல் வந்துவிட்டு…..
விடைபெறாமல் திரும்பிச் செல்லும்
உனக்கு வாழ்த்துக்கள்……

நீல பத்மநாபன்  ஏப்ரல் 19 2020—சித்திரை மாதம், பூட்டாதி நட்சத்திரம்