Monday, September 24, 2012


 கவிதை
                விலாபம்  
    சாலையும், ஆரியசாலையும்,
    பழையசாலையும், புத்தன்சாலையும்,
    வலியசாலையும்.....
    ஏன், பழம் பெரும் புகழ் வாய்ந்த
    இந்த வரலாற்று மகிமை கொண்ட
    காந்தளூர் சாலையையே
    விளப்பில் சாலையாக்கிவிட்டார்களே
    இன்று உன் நாட்டை ஆளவந்தவர்கள்...
    கொடிபிடிக்கவும் கோஷம் போடவும்
    பொலீஸ், பட்டாள சேனையை எதிரிடவும்
    நேரமில்லாது அன்றாட வயிற்றுப்பாட்டுக்கு 
    அல்லல்பட்டு ஓடி நடக்கும் பாமர மக்கள் நாங்கள்
    நரர்களாய் இங்ஙனம் பிறந்தோம் பூமியில்
    இந்நகர வாரியின் நடுவில் 
    இந்நரகத்திலிருந்து கரையேற்றுங்கள்
    திருவனந்தை வாழும் பெருமாளே...

                 கொலைவெறி
    கை வெட்டுவோம், கால் வெட்டுவோம்
    குலம் குத்துவோம், சவம் குத்துவோம்
     மந்தபுத்திகள், மனநோயாளிகளை
     வெறிநாய்களைப்போல் அறைந்து கொல்வோம்
     நோய்ப்படுக்கையில் கைகால் மரத்துப்போய்க் கிடக்கும்
     வயசாளி பெண்ணாக இருந்தாலும்
     காம பூர்த்திக்கு இரையாக்குவோம்
     தந்தையை ஹத்திசெய்யும் தனையர்கள்.....
     குழந்தைகளை கொன்றிடும் தாய்த் தந்தையர்
     இன்னும், இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம்
     -இதுதான் இன்றைய எங்கள் புண்ணிய புராதன பூமி....

                                      நீல பத்மநாபன்
                                                  

Friday, August 17, 2012

பசுமயை நாடி...


கவிதை            பசுமையை நாடி.....

       காட்டைத் திருத்தினோம்
   கழனி செய்தோம்
   நஞ்சை புஞ்சைகளில்
   கதிர் கற்றைகள் வளர்த்தோம்.....வளர்ந்தோம்...
   தானியங்களின் அறுவடை
   பசித்த வயிர்களுக்கு அன்னக்கொடை.
   பறவைகள்....பசுமாடுகள்...ஜீவராசிகள் யாவுமே
   செழித்தன பசுமைப்புரட்சியில்....

  நீலவானுடன் சரசமாடும்
  பச்சைமர உச்சிகள்.....
  பொதிகை மலைத் தொடர்ச்சிகள்....
  குமரன் குடியிருந்த குன்றங்கள்.....
  பழமரச்சோலைகள்.....
  ஜீவ ஊற்றாய் தாகஜலம்
  பொழிந்த அருவிகள்...
  நதிகள்....நீர்த்தடங்கள்.....
  புனல் பூங்கணங்களை சூல் கொண்ட
  கார்முகில் கன்னிகள்
  வாரி வழங்கிய மும்மாரி
  அமிழ்த தாரைகள்
  நாடெங்கும் களிநடம் செய்த
  நாமகளும் திருமகளும்….
   காலங்கள் கரைந்தன....
 ஆசையை வென்ற பேராசைகள்..
 காடான காட்டையெல்லாம் அழித்தோம்..
 வானம் முட்டிய மரங்களையெல்லாம்
 வேரோடு சாய்த்தோம்....
 கூண்டோடு ஒழிந்த பறவைகள்..,விலங்குகள்..
 மண்மேடுகளான காடுகள்...,ஆறுகள்...
 நீலமலையெல்லாம்
 வெறும் மொட்டைக் குன்றுகளாயின..
 ஜீவ ஊற்றுகள் நிரம்பி வழிந்த
 நதிகளின் மடிகளைக்கூட
 தோண்டித் தோண்டி...,
 மணலையெல்லாம் அள்ளியள்ளி...,
 கழனியாயிருந்த பொன்விளையும்  பூமியில்
 மலையை உடைத்த கற்களை ஜல்லிகளாக்கி...,
 சிமண்ட்டுடன் கலந்து,
 காட்டை அழித்த மரங்களை தடிகளாக்கி...,
 சிமண்ட் கோபுரங்கள்...,மாடிமேல் மாடிகள்....,
 ராஜ பாட்டைகள்.....
 நச்சுப்புகையை எக்கணமும் நிறைக்கும்
 வாகனங்கள்....,யந்திரங்கள்.....
 சுற்றுச்சூழல் மாசால் சுத்த வாயு சூன்யம்...,
 பசுமையெல்லாம் பொசுங்கி,
 வெறும் கான்க்ரீட் காடுகள்....
                             3
  
   மீண்டும் வஸந்தம் பிறந்திட....,
 பூக்கள் விரிந்திட....,
 மழலைகள் சிரித்திட...,
 பசுமை கொலுவிருக்க...,
 அன்னை பூமியை ஆராதிப்போம்....
 மண்ணை மதிப்போம்...
 மரங்களை நடுவோம்...
 செடிகொடிகளை பேணுவோம்..
 பயிர் வளர்ப்போம்....
 மலையை வனமாய்
 நிலைபெறச் செய்வோம்....
 நதிகளின் குளிர் மடியில்
 ஜீவ அமுதம் மீண்டும்
 சுரக்கச் செய்திடுவோம்...
 காற்றில் கலந்த நஞ்சு அகலட்டும்....
 பிராணவாயு நிறையட்டும்....
 மக்கள் குலம் செழிக்கட்டும்........
 செழிக்கட்டும்......

                             நீல பத்மநாபன்

Wednesday, June 20, 2012

ஒரு நடுநிசிநேர தெருக்கூத்து


கவிதை

ஒரு நடுநிசிநேர தெருக்கூத்து

நீல பத்மநாபன் 

     நடுநிசி பனிரெண்டைத் தாண்டிவிட்டநேரம்கெட்ட
     நேரமதில் இரண்டு மணிநேரம் தாமதமாகி          
     வேண்டாவெறுப்போடுசொந்த ஊர் வந்துநின்ற
     ரயிலில் இருந்து மனைவி,மகள்,கைப்பெட்டியுடன்
     எப்படியோ இறங்கும்போதுகளைத்துத்துவளும்
     உடம்பும் உள்ளமும்;தள்ளாமையில் தள்ளாடும்
     தேகத்தைத் தள்ளிக்கொண்டு படிகள் ஏறி இறங்கி
     ”ப்ரீ பெயிட்” ஆட்டோ கௌண்டர் முன் நெடுநீள க்யூ
     வரிசை;ஆட்டோ கிடைத்தால் பத்துநிமிஷபயணத்தில்
     வீடுபோய்ச்சேர்ந்துவிடுவோமே என்ற நப்பாசையுடன்
     உடல் உபாதைகளை அடக்கிநிறுத்த முயன்றவாறு
     காத்துநிற்கும் கடின யக்ஞம்....
     அப்பாடா, தன்முறை வந்துவிட்டது,கடவுளுக்கு நன்றி,
     உள்ளிருக்கும் போலீஸ்ச்சிப்பந்தியிடம் ஆட்டோ
     ஓட்டியிடம் கொடுக்கவேண்டிய ஆட்டோக்கூலிக்கான
     சீட்டுக்காக சில்லறையை நீட்டியவாறு ‘சரஸ்வதிநகர்
     பைபாஸ் ’என்றார் பலகீனமாய். ’அப்படியொரு பைபாஸே
     இல்லையே,கிள்ளிப்பாலம்,இல்லாட்டி அட்டக்குளங்கரை,
     சீக்கிரம் சொல்லுங்கோ’என்று கத்தினான்   
     எரிச்சலுடன்.செக்கச்சிவந்த அவன் கண்கள்,தூக்கக்
     கலக்கமா....இல்லை வேறு கிறுக்கமா...   பின்பக்க அடுத்தமுரட்டுஆள் இவரை நெட்டித்தள்ளி   முந்திக்கொண்டு சில்லறையை நீட்டி’பேயாடு’என அவன்  
      இடப்பெயரைப்புகல,உள்ளிருந்து போலீஸ்பாணியில் இவரிடம்       ‘நீங்கி நில்லுங்கோ’என   கட்டளை;பக்கவாட்டில் நின்ற       காக்கிஉடை ஆட்டோஓட்டி,வீடெங்கேன்னுகூட தெரியாதா
       என கிண்டல் அடிக்க,அடுத்தடுத்து கவுண்டருக்குள்
       கை நுழைத்து இடப்பெயர் சொல்லி சீட்டுவாங்கி           
       ஓடிவந்து நிற்கும் ஆட்டொவில்விரைகிறவர்கள், 
        ஏனயோர்கள் இளக்காரமுடன் பார்வையை எறிந்திட
        முன்பு நேரம் கெட்ட நேரத்தில் ஒருதடவை
        கிள்ளிப்பாலத்தில்,இன்னொரு தடவை நடுமதிய
        வேனாவெயிலில் அட்டக்குளங்கரையில் இறக்கிவிட்டு
        ஆட்டோ ஓடிவிட ,வேறு வழியின்றி மூட்டைமுடிச்சுடன்
        நடக்க நேர்ந்த கசப்பான முன் அனுபவம்....
        ’சரஸ்வதி நகர் பெயர்பலகை இருக்கு, சரஸ்வதி நகர்
         ரெஸிடண்ட்ஷியல் அஸோஸியேஷன்     பதிவுச்செய்யப்
         பட்டது’ என்றெல்லாமென்ற இவர் முறையீடுகளுக்கு
         செவிசாய்க்கும் மூடில் இல்லை உள்ளிருப்பவன்.
         ’அதெல்லாம் தெரியாது,இங்கே எங்க லிஸ்டில் இல்லை’  
‘கங்கா நகர், யமுனா நகரெல்லாம் இருக்கு,சரியா
யோசிச்சுப்பாருங்கோ,சொந்த வீடிருக்கும் இடம்கூடத்
தெரியாதா தாத்தா’-பக்கப்பாட்டுப் பாடி தூபம் போட்டான் ஆட்டோ ஓட்டி..கங்கையமுனை சங்கமத்தில்
சரஸ்வதி ஊனக்கண்களுக்கு புலனாகாது என்ற தத்துவ
போதனையா?அரை நூற்றாண்டுக்கும் மேலாக வாழ்ந்து,
துறக்க காத்திருக்கும் விட்டை அடைவதுஎப்படி
என்பதை என்னசொல்லிஇவர்களைப் புரியவைப்பது?
ஆட்டோ ஓட்டிச் சொல்வதிலவியப்பதற்கில்லை,
பொதுமக்களுக்கு நியாயம் வழங்கும் காவல்
சிப்பந்தியுமா?பின்னால் வரிசையிலிருந்து
விரைந்து வருகிறவர்களின் முட்டிமோதல்..
கிறுகிறுக்கும் தலை, நிலை தடுமாறியது..
‘புத்தன்கோட்டைக்குத் தாறேன்’குரலில் கேலி?
ஊரின் பழமையான சுடுகாடிருக்கும்இடம்,
சரஸ்வதிநகர் பைபாஸ் ஜங்க்‌ஷன் வழியும்செல்லலாம்
தன் வீட்டுக்கு அந்த ஜங்க்‌ஷனில் இறங்கி கொஞ்சம்
நடக்கணும்....ஒண்ணுக்கு ரெண்டாய் அவன் எழுதித்தந்த
இரு மடங்கு ஆட்டோகூலிசீட்டை வாங்கி ஆட்டோ ஓட்டி கையில் கொடுத்துவிட்டு மனைவி மகள் ஏறியபின் ஆட்டோவிலேறி உட்கார்ந்தார் நடைப்பிணமாய்.....
 

Monday, May 28, 2012

ஆளுக்கொரு சாமி

கவிதை

ஆளுக்கொரு சாமி

நீல பத்மநாபன்

குடும்ப வீட்டில் தனியாய் இல்லை பூஜையறை; காலைப்பொழுதுகளில் அப்பா கடைக்குப்போகும் அவசரத்தில் சாமி கும்பிடுவதை சின்னநாட்களில் பார்த்த நினைவில்லை. செவிவளையங்கள் ஒடிந்தும் ஒடியாமலும் தொங்கும் மூக்குக்கண்ணாடியை மாட்டிக்கொண்டு பாட்டி தனியாய் ராமாயணம் வாசிப்பாள், மாலைக்கருக்கலில் அம்மா வெளிநடையும் உள்நடையும் அலம்பிவிட்டு நடுக்கூடத்தில் கிழக்குபார்த்திருக்கும்,நெல் உமியால் அழுத்தித்தேய்த்து பளபளவென மின்னும் பித்தளை குத்துவிளக்கில் செம்பரத்திப்பூவோ முற்றத்து முல்லை அரும்புச்சரமோ சூடி குங்குமப்பொட்டிட்டு துடையில் திரித்த வெள்ளைத்திரியிட்டு எண்ணையூற்றி ஏற்றும் தீபச்சுடரில் சீதேவியே ஒளியாய் வீடெங்கெணும் நீக்கமற நிறைவதாய் உணர்வு. இரவு எத்தனை மணியாயினும் அப்பா வீடுதிரும்பியதும் குளித்து சுத்தமாகி விபூதி தரித்து அவர் அறையில்மாட்டியிருந்தபுன்முறுவல்பூக்கும் பாலமுருகன் படத்தின் முன் கண்மூடிகைகூப்பி வணங்கி நின்று சற்று நேரம் மவுனபிரார்த்தனை செய்யாமல் உணவு புசித்து பார்த்ததேயில்லை. அவன் வீடுகட்டும்போது அலைக்கழிக்கும் மனதை நிம்மதியாய் இறைநினைவில் சிலகணநேரமேனும் மூழ்கச்செய்திட சாமிப்படங்களைவைத்திடபீடமும் விளக்கேற்றிட முன்னால் வசதியும் உள்ள சின்னஒருபூஜைஅறையையும் கட்டிடமறக்கவில்லை அந்நாளிலிருந்து பாட்டி அப்பா அம்மா யாவரும் காலபாசம் வசம் சென்றுவிட்ட இந்நாள்வரை மனைவிமக்கள்,ஏனைய உற்றம்சுற்றம் உடல்நலம் குழந்தைகள் படிப்பு வேலை திருமணம் மேலும் வாழ்வில் இதுவா அதுவா என்று தத்தளிக்கும் இக்கட்டான கட்டங்களிலெல்லாம் வீட்டில் அனைவருக்கும் பூஜைஅறைஅடைக்கலம் வைகறைகளில் முதல்வேலையாய் முந்தையநாள் உலர்ந்த மலர்களை சாமிபடங்களிலிருந்துஅப்புறப்படுத்தல், சிறுகும்பாவில் சுத்தநீர் சமர்ப்பித்தல் முற்றத்து விரிந்தும் விரியாத பூக்கள் சூடல் வீட்டில் எல்லோரும் ஒத்துழைத்தார்கள் குழந்தைகள் இறக்கைமுளைத்து வெளியூர் பறந்துசென்றபின இல்லக்கிழவிக்கு குனிந்துநிமிர கூடவில்லை;அவள் அறையிலேயே குனியாமல் நிமிர்ந்து நின்று பூசூட,தீபமேற்றி தொழுதுநிற்க சின்னபீரோவின் மேலே அவள் சாமிகள்..... பூஜைஅறை சாமிகள்முன் புலர்காலைஉலர்ந்த் பூக்கள் அகற்றுவதிலிருந்துத்தவங்கி பூசூடல், காலைமாலை தீபமேற்றல் எல்லாம் அவன் மட்டும்... எப்போதாவது வீடுவரும் புதல்வர்புதல்விகள், பெயரன் பெயரத்திகள் வீட்டுக்காரிவழியே பிந்தொடர வீடும்நாடும் நலம்பெற வீட்டிலிருப்பவர்கள் எல்லாம் ஒன்றுகூடி ஒரேஇட சாமியைத் தொழுவதின் மகிமைப்பற்றி எண்ணிக்குமைந்துகொண்டிருந்த அவனுக்கு ஆறுதல் அளித்தது அருவிப்புறம் பிரதிஷ்டை.

Tuesday, March 20, 2012

வார பலன்

கவிதை

வார பலன்

நீல பத்மநாபன்

சின்ன நாளிலிருந்தே துவங்கிய
தின வார மாத இதழ்களில் வரும்
சோதிட பலன்கள் பார்க்கும் வழக்கம்
நிறுத்தமுடியாமல்இன்றும் தொடரும் பலகீனம்
பகுத்தறிவுக் கட்சிகளின் தாக்கத்தால்
மூடநம்பிக்கையெனசிலகாலம் தலைதாழ்த்தியிருந்தும்
மீண்டும் தொத்திக்கொண்ட கொடுமை
பார்ப்பதால்மட்டும் நம்புவதாய் கொள்ளமுடியாதே
-தனக்குத்தானே சமாதானம் சமாளிப்பு
சில இதழ்களில் ராசி-கும்பம்
சிலவற்றில் நட்சத்திரம்-பூருருட்டாதி
ஆங்கிலமாததேதியும் சிலதில்
ஒன்றில் பொருள் வருகை ,
வேறொன்றில் பெரும் நஷ்டம் ,
ஒன்றில் சகோதரர்களின் உதவி ,
இனியொன்றில் அவர்களுடன் சணடை.
முரணானவை ஒன்றுக்கொன்று;மட்டுமல்ல, வாகனவிபத்து கவனமென வாசித்தும்
தடுக்கத்தெரியாது பைக் மோதி
ஆஸ்பத்திரியில் கிடந்த அனுபவம் .
மனைவிமக்களிடம் சண்டை.
நண்பர் பகைவராகலாம் .
வேலையில் இடமாற்றம்.
வெளிநாட்டு பயண வாய்ப்பு.
கலைத்துறையில் புகழ் ,
அவமதிப்பு,
இத்யாதி இத்யாதி
நடந்தவை சில் நடக்காத்வை பல
இருந்தும் விடமுடியாத
தேவைத்தீமையாய்த் தொடரும் போதை .
திடுக்கிடவைத்து கூடவே ரகசியமாய்
கொஞ்சம் தெம்பும் அளித்த இவ்வாரபலன் ;
-பெண் சுக யோகம்
பெண்டாட்டியிடமிருந்து கிடைக்க வாய்ப்பே இல்லை
தூரத்தொலைவிலிருந்து எப்போதாவது வரும்
புத்திரிகள்பேத்திகள் தொலைபேசி அழைப்பு மூலம்?
தொலைவிலிருந்து எப்போதாவது வரும் சோதரிகள்?
மாணவ பருவத்தில்,வேலைபார்க்கையில்,யாராரும் அறியாது உள்ளுக்குள் ஆராதித்த ஏதாவது மங்கைநல்லாள்?
வாரம் முடிந்து கொண்டிருந்தது,
நாளை அடுத்த இதழில், எதிபார்த்து ஏமாற்றம் என
பலன் வரப்போகிறதோ-எண்ணியவாறு நடக்கையில்
வழி மறிக்கும் வீடு திரும்பும் பள்ளிச்சிறுமி,
தோளில் தொங்கும் புத்தகப்பையிலிருந்து
அவசர அவசரமாய் ஒரு நோட்டுபுத்தகத்தை உருவி
வெற்று பக்கமொன்றை விரித்து நீட்டி
’அங்கிள் ஒரு ஆட்டோகிராப்’
கள்ளம் கபடமறியா முகம்
‘என்னைத்தெரியுமா’
‘ஓ தெரியுமே ஒங்க கவிதை படிச்சிருக்கேனே’

Saturday, February 25, 2012

நினைவஞ்சலி-எ.ஆர்.ராஜாமணி

நினைவஞ்சலி

ஏ. ஆர்.ராஜாமணி(1931-2012)


நீல பத்மநாபன்

“நமஸ்காரம்.தஙகள் அன்பான கடிதம் இன்று வந்தது.அளப்பரிய சந்தோஷம்+ நன்றி.நல்லது.
தில்லியில் கோடைவெய்யலுடன் உயிரை வதைக்கும்
இமாலயப்பனிக்காற்று, நாள் முழுவதும்-நாள் தோறும்!
நீஙகள் சொன்னபடி, ‘ஏதோ, எப்படியோ இறையருளால், இதுபோன்ற- இயற்கையின் அளவில்லாத் திருவிளையாடல்கள் அனைத்தையும்,எதிர்கொண்டும்-சமாளித்துக்கொண்டும் மிக நலமாகவே வாழ்கிறோம்’ என்பதும் உண்மை! இறைவன் கருணையும் திருவருளும் வாழ்க! நல்லது.பிறவிவரம் பின்னர்.”

இந்த ராஜாமணியின் 2-2-2012 தேதி கடிதம்(கார்டு) 8-ம் தேதி எனக்கு கிடைத்து ஒருவாரம் திகையவில்லை.நேற்றுமுன் தினம்(14-2-2012) அவர் காலமான செய்தி எட்டியது. அந்த பிறபின்னர் இனி இல்லை.

எழுபதுகளில் ”ஆதேர்ஸ்கில்ட் ஆப் இந்தியா” கூட்டங்களுக்கு டில்லி வரும்போது கநாசு வீட்டில் வைத்துத்தான் ராஜாமணியுமாக என் பழக்கவும் நட்பும் துவங்கி தொடர்ந்தன. பிறகு பல ஆண்டுகளுக்குப்பிறகு சாகித்ய அக்காதமி கூட்டங்களுக்காக நான் டில்லி வரும்போதெல்லாம்என்னதான் சுகசௌகரியங்கள் இருந்தாலும் கரோல்பாக் ராமானுஜம் லாட்ஜ் தவிர வேறெங்கும் தங்குவதுபற்றி நான் யோசித்ததே இல்லை. முக்கிய காரணம்ஒரு மூத்த சகோதரனைப்போன்ற ராஜாமணியின் நெருக்கமான பாச உணரவும் ஆத்மார்ந்தமான நட்பும்தான். (என்னை விட ஏழு வயதுக்கு மூத்தவர் அவர்)
டில்லிச் செல்லும்போதெல்லாம் முன்கூட்டி அறைக்கு ரவிக்கு தகவல் தெரிவிக்கையில் மறக்காமல் ராஜாமணியையும் தெரிவித்துவிடுவேன். பிறகு டில்லியில் நான் தங்கியிருக்கும் இரண்டொரொரு நாட்கள் அதிகாலைப்பொழுதுகள் மட்டுமல்ல, மாலையில் நான் அறையில் திரும்பிய நேரத்திலிருந்து தூங்கச்செல்வதுவரையிலும் எந்த அலுப்புமின்றி என் கூடவே இருந்து டில்லிச்செய்திகளுடன் ஆகாயத்தின் கீழுள்ள சகலமான விஷயங்களையும்- குறிப்பாக பிரபலங்களைப்பற்றியும் எந்த தணிக்கௌயுமின்றி மனம் விட்டுபேசுவார். அவருடைய தனித்தன்மையே இந்த பாவனைப்பாசாங்கில்லாகுழந்தையைப்போன்ற வெகுளிகுணமே.இதை சரிவர புரிந்துகொள்ளாமல் அவரிடம் சண்டைபோட்டுகொண்டவர்களைப்பற்றியும்அவர் பேச்சிலிருந்தே புரிந்துகொள்ளலாம் .இவர் அடிப்படை தனிப்பட்ட குணவிசேஷங்கள்,இவரைப்போலவே என்னைவிட மூத்தவர்களான நண்பர்கள் நகுலன், ஷ்ண்முக சுப்பைய்யா போன்றவர்களுடனுமாக ஒற்றுமை இருந்ததினால் எனக்கு ராஜாமணியின்கூட ஒத்துப்போகவும் நட்பின் சுகந்தம் கடைசிவரை அனுபவிக்கவும் பெரிய சிரமம் ஏற்படவில்லை.

அவர் சம்பந்தப்பட்ட எத்தனையோநிகழ்ச்சிகளைப்பற்றிய
நினைவலைகள் மனதை நெகிழச்செய்கிறதேயாயினும் அவை
யாவற்றையும்விரிவாக சொல்லும் தருணமல்ல இது. என்பினும்ஒன்றிரண்டை மட்டும் தற்போது இங்கே சுருக்கமாய் குறிப்பிடலாமென்று எண்ணுகிறேன்.

எத்தனையோ தட்வை அறையில் வந்து என்னை சந்தித்திருக்கிறார். ஒருதடவையேனும் அவர் இருப்பிடம் செல்லவேண்டுமென ஆசைப்பட்டேன். ஆனால் அவர் அதை கூடியமட்டும் தவிர்த்தார்.ஆனால் மீண்டும்மீண்டும் நான் கட்டாயப்படுத்திக்கொண்டிருந்ததால் ஒரு தடவை இணங்கினார். உண்மையில் என்னால் மறக்கமுடியாத, மனதில் சோகத்தழும்புகளை ஏற்படுத்திய அனுபவம்அதுஎனறுதான் சொல்லவேண்டும்.

அவர் கூடநடந்தேதான் சென்றேன்.அது ஒரு மாலை நேரம்.சமீபவாசிகள் அனேகமாக தமிழரல்லாதவர் அவரிடம் காட்டிய பாசம், அவர்களிடம் அவர் காட்டிய நெருக்கம், குறிப்பாக குழந்தைகளுக்காக அவர் ஜேபியில் கொணர்ந்து கொடுத்த இனிப்புவகைகள்...ஆனால் மிகவும் குறுகிய ஒழுங்குமுறையில்லாத மாடிப்படிகள் ஏறி மேலேமூன்றாவது மாடியா நாலாவதா சரியாக ஞாபகம் இல்லை,மொட்டைமாடியைத்தொட்டிருந்த எலிவளையைப்போன்ற அந்தசின்னஞ்சிறு அறையைப்பார்த்தபோதுதான் நான் அதிர்ந்துபோனேன்.படுப்பது இருக்கட்டும் உட்காரகூட இடவசதியில்லாத அந்த அறைக்குள் தரையிலும் நாற்காலியிலும்(கட்டில் பார்த்ததாய் ஞாகம் இல்லை)
நிறைந்துவழிந்த புத்தகங்கள்,பழைய சஞ்சிகைகள், பத்திரிகைகள்,சுவரிலும் தரையிலும் எல்லாம் ஈரக்கசிவின் அடையாளங்கள்....”ஆளைக்கொல்லாமல் கொல்லும்” டில்லிக்குளிரில் இந்த வயசிலும் இத்தனைக்கு சுறுசுறுப்புடன் இயங்கும் இவர் இங்கேதான் வாழ்கிறார் என்பது என் மனதில் ஏற்படுத்திய ரணம் ....ஒருநாள் எத்தனைத்தடவை இந்த படிகளை பாவம்,இவருக்கு ஏறி இறங்கவேண்டும், அகோரப்பனி,அடைமழைக்காலங்களில்- குறிப்பாக இராப்பொழுதுகளில்இங்கே வெடவெடத்தவாறு எப்படி உயிர் வாழ்கிறார்-என்றெல்லாம் நினைந்து என் மனம் பரிதவித்தது.(வெளிநாட்டில்தனியாக வாழவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்ட ராஜாமணியின் வயதுவரும் முதிர்ந்த தமிழ் எழுத்தாளர் ஒருவரின் தனியறைக்குச் சென்றது ஞாபகத்தில் இருக்கிறது.ஐந்து நட்சத்திர சுக வசதிகள் இல்லாவிடிலும் இத்தனை ஆண்டுகாலம் பூவுலகில் வாழ்ந்ததற்கு நன்றிக்கடனாக அந்த மூத்த குடிமகனுக்கு அடிப்ப்டைத்தேவைகள்-குடியிருக்கும் வசதி-கட்டில்,மேஜை,நாற்காலிகள், சுத்தமான கழிப்பறை, குளிர்காலத்தைச் சமாளிக்க ஹீட்டர்,உண்ண உண வு,உடுக்க உடை, மருத்துவ உதவி -இவற்றை கடமையாக மனிதாபிமானத்துடன் அரசே அளித்துக்கொண்டிருக்கிறது.)

பயணம் செய்வதிலும் புதிய புதிய இடங்களை,மனிதர்களைத் தெரிந்துகொள்வதிலும் ராஜாமணியிடமிருந்த தணியாத ஆர்வத்திற்கும் ஆவேசத்திற்கும் தள்ளாமையோ வியாதிபயமோ குறுக்கே நிற்கவில்லை. திருவனந்தபுரம் வரவேண்டுமென்ற ஆசையை நேரிலும் கடிதத்திலும் பலமுறை வெளியிட்டிருக்கிறார்.அப்படித்தான் இருதடவை-2007,2010 ஆண்டுகளில் திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம், தமிழ்எழுத்தாளர் சங்க கூட்டங்களுக்காக வந்திருக்கிறார்.முதலில் வரும்போது சாகித்ய அக்காதமி ராமலிங்கமும்,இரண்டாவது தடவை டில்லி வானொலி தென்கிழக்காசியத் தமிழ் ஒலிபரப்பு குருமூர்த்தியும் உடன் வந்திருந்தார்கள்.

இருநாள் பகலிரவு நீளும் ரயில் பயணக் களைப்பில் சரியாக ஓய்வெடுக்காமல் வேறொன்றும் செய்யமுடியாது,இளைஞர்களாக இருந்தால் கூட.! ராஜாமணியானால் வந்து சேர்ந்த உடனையே பத்மநாபசுவாமி கோயிலுக்குப் போவதற்கான ஆயுத்தங்களில் முழுகலானார்.மாலையில் அவரும்ராமலிங்கமும் என்கூட இரண்டொரு கிலோமீட்டர் தொலைவிலுள்ள கோயிலுக்கு நடந்தே வந்தார்கள் காலில் செருப்பில்லாமல்.

அடுத்தநாள் தமிழ்ச்சங்க நிகழ்ச்சியில் ராஜாமணியின் ஆணித்தரமான கருத்துரை எல்லோருக்கும் அவர் மீது ஒரு தனி பாச உணர்வையும் மதிப்பையும் ஏற்படுத்தியது என்பது மிகையல்ல. என்வேதான் மீண்டும் அவரும் ஆசைப்பட்ட்தற்கிணங்கி சங்கம் அவரை அழைத்தது.அப்போதுதான் குருமூர்த்தியும் உடன் வந்திருந்தார்.அப்போது அவர் கூடவும் முன்னால் போலவே ஆலய தரிசனம் செய்வதில் அவர் மிகவும் கரிசனமாகவே இருந்தார். சங்க மேடையில் அவர் கூட வீற்றிருந்த ஏனைய சொற்பொழிவாளர்களுடன் இருந்த தலைமுறைகள் நாவலுக்கு திரைவடிவம் கொடுத்துக்கொண்டிருந்த இளம் இயக்குநர் வ.கௌதமனிடமும் தயாரிப்பாளர் மணிவண்ணனிடமும் தன் உரையில் படம் முடிந்ததும் டில்லியில் திரையிடவேண்டுமென்று வேண்டுகோளும் விடுவித்தார்.அதை கண்டிப்பாகச் செய்வோம் என்று கௌதமனும் கூட்டத்தில் ஒப்புக்கொண்டார்.

ராஜாமணியின் எழுத்திலும் பேச்சிலும் இருந்த தெளிவும் அழுத்தமும் அவருக்கென்று ஒரு தனிபாணியை
நிலைநாட்டியுள்ளது..அவரை ,அவர் கருத்துக்களை மறக்கமுடியாமல் நம்மிடம் சுழலவைப்ப்தின் முழுமுக்கிய காரணம் அவர் ஆத்மார்த்தத்தன்மைதான்.தவிர ,அவருடைய குரலின் ஏற்ற இறக்கம், அவருடைய இயல்பான மெய்மொழி என்று மேலும் காரணங்களைச் சொல்லிக்கொண்டேபோகலாம் என்று தோன்றுகிறது.

அவர் விட்டுச்சென்ற எழுத்தாக்கங்களை கோர்வைப்படுத்தி நுல்வடிவம் செய்வது அவர் தமிழ் இலக்கியத்திற்கு செய்த சேவையை வருங்கால சந்ததியனருக்கு எடுத்துச் செல்லும் ஆக்கபூர்வமான கைமாறாக இருக்கும் என்றி குறிப்பிட்டு என் எளிய நினைவஞ்சலியை சமர்ப்பிக்கிறேன்.

Monday, February 13, 2012

நகரம் நரகம்

கவிதை

நகரம் நரகம்

நீல பத்மநாபன்

புறநகர் பகுதியில் பரந்த நிலப்பரப்பில்
பலநாள் ஆய்வுகள் ஆயுத்தங்கள்
உள்நாட்டு வெளிநாட்டுதொழில்நுட்பக்கூறுகள்
ரஸாயன உள்ளமைப்பு தயாரிப்புக்களுடன்
கோடிகள் செலவிட்ட தளவாடங்கள்
கொட்டுமேளம் குரவைகோரஸ்
ஆரவாரமாய் நிறுவப்பட்ட
நகர குப்பைக்கூளங்கள் பதப்படுத்தி
உரம் செய்யும் தொழிற்சாலை
நகரையும் நாட்டையும் ஆளவந்தவர்களின்
ஆண்டாண்டுகால போட்டாபோட்டி
நிர்வாகத்திறமையின் அறுவடை
நகர் முழுதும் அங்கிங்கினாதபடி
எங்கெங்கும் குப்பைக்கூளக்குவித்தல்கள்
தகனங்கள் புதைத்தல்கள்
சதா நீக்கமற நிறையும்
பிளாஸ்டிக் விஷ புகைச்சுருள்கள்
துர்நாற்ற வாயுமண்டலம்
சுற்றுப்புறச்சூழல்நச்சு
கூட்டம்கூட்டமாய் கொசுக்கள் ஈக்கள்
எலிகள் நாய்கள்
டெங்கிக்காய்ச்சல் பறவைஜுரம்
மலேரியா டைபாய்ட் ஜுரங்கள்
மஞ்சள்காமாலை இன்னும் என்னென்னமோ ஜுரங்கள்
வெறிநாய்க்கடியால் குரைத்துச் சாக்காடுகள்
இத்தனைக்குப்பிறகும்
நீயா நானா