Monday, March 24, 2014

செய்வதறியா......

கவிதை
                     செய்வதறியா...........
                              
                                                 நீல பத்மநாபன்
         
                         பார்க்கலாகாது என நினைந்தாலும்
           பார்த்துவிடும் விழிகள்......
           கேட்கக்கூடாதவைகளையும்
           கேட்டுவிடும் காதுகள்.....
           நஞ்சு கலந்ததெனத் தெரிந்தும்
           சுவைத்துண்ணத் தயங்காத,
           கேட்போரை முள்ளாய் குத்திவிடும்
           கூர் நாக்கு....
                         இசைவின்றி நாற்றம், மணம், சுற்றுப்புற மாசுக்கள்
           பேதமின்றி உள் இழுத்துக்கொண்டிருக்கும்
           நாசித் துவாரம்....
           வீடு வெளி வாயுமண்டலம் நீர் திடப்பொருள்
           எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருப்பவை
           விஷம், அல்லாதவை வேறுபாடின்றி
           தன்போக்கில் வந்து படிவதையெல்லாம்
           ஏற்றுக்கொள்ளும் உடம்பின் தோல் பரப்பு.....
           ஐம்பொறிகளே சுயக்கட்டுப்பாட்டில்
           இல்லையென்ற ஞானம் வந்ததும்
           பிறரிடம் குறை காண்பதை நிறுத்தப் பழகலானான்....
           அதை அடைவது முந்திய ஐந்தைவிடகடினமெனக்
           கண்டுணர்ந்து இனி செய்வதறியா மூடனானான்...

           வால் துண்டு
          
                         விநாயகரை பூஜித்தான் ஆஞ்சனேயரை பஜித்தான்
           பிரம்மசரியம் கைகூடுவதாய் போக்குக்காட்டியது
           காண்பவை கேட்பவை சுவைப்பவை முகர்பவை
           தீண்டுபவைகளால் பொசுபொசுத்துப்போய்விடுமோவென
           அஞ்சி செயவதறியா.......
        

            

Monday, February 24, 2014

பழுது

                                                பழுது
                                   நீல பத்மநாபன்
         குழாயில் தண்ணீர் இல்லை.....
           வாஷர் தேய்ந்து நீர் வடிந்து
           வீணாகிக்கொண்டிருக்கிறது...
           ‘லைட் ஸ்விச்சில் கோளாறு
           ஷாக் அடிக்குது   பியூஸ் போகுது
           உடனடி மாற்றியாகணும்..
           ட்ரிய்னேஜில் கழிவுநீர்
           ஓடிப்போகமாட்டேங்குது...
           மாடியிலிருந்து வரும் சிமண்ட்
           குழாயில் விள்ளல்கள்.....
           குழாயடியில் சிமண்ட் விலகி
           பாசி படர்ந்துவிட்டது...
           அறைக்கதவு அடையமாட்டேங்குது...
            அலமாரி பூட்டில் கோளாறு.....
            கூட வாழவந்தவளிடமிருந்து
            மாறிமாறி வந்துகொண்டிருந்த                         
            புகார்களைத் தீர்க்க ஒழுங்காய்
            ஓடியாடிக்கொண்டிருந்தவன்
            காலக் கொடுங்காற்றில் அடிபட்டு
            இனி பழுது பார்க்கவும் பாங்கில்லாது
            நம்பிக்கையிழந்து பழுதுக்கு அப்பாற்பட்டதை
            நாடியிருப்பதைத் தெரிந்தும் தெரியாது
            சரமாரியாய் எய்யப்பட்டுக்கொண்டிருக்கும்
            புதிதுபுதிதான புகார்கள் குற்றச்சாட்டல்கள்......
             .

        

                         

Monday, January 27, 2014

ஒரு பூங்காவின் புலம்பல்

கவிதை

                    ஒரு பூங்காவின் புலம்பல்
                                             நீல பத்மநாபன்

அந்நாளிலிருந்தே, ஆனந்தசயனம் கொள்ளும்
ஆதிபகவனின் அருட்காட்சியை கண்டுகளித்தவாறு
அனந்தன் காட்டின் துளியாய் கிடந்திருந்தேன் நானிங்கு...
காலக்காற்றில் விருட்சங்கள் வீழ்ந்தன. புத்தலைகள்
எழுந்தன....சுற்றிலும் வாகனங்கள் விரையும் வீதிகள்
பஸ் நிலையங்கள்.,திரை அரங்குகள் அமர்க்களப்பட்டும்
இங்குள்ளவர்க்கு, யந்திரவாழ்வில் சற்றேனும் ஓய்ந்திருந்து
காற்றுவாங்க  என்னை மட்டும் விட்டு வைத்திருந்தனர்......
அந்நியர் ஆட்சியை முறியடிக்க வந்துதித்த
தேச பிதா கூட அவர் நெடும்பயண பாதையில்
என் மண்ணில் கால் பதித்து மக்களை
ஆயுத்தமாக்கியிருக்கிறார் ஓர் நாள்......
மன்னராட்சியும் அந்நியராட்சியும் மடிந்து
எல்லோரும் இந்நாட்டு மைந்தராயினர்...
அம்மைந்தரில் ஒருவனே செய்நன்றி மறந்து
களபலி செய்த பிதாமஹனின் சிதை பஸ்மம் கூட
இங்கே அவர் கால் பதித்த என் மண்ணில் கொணர்ந்து
வைத்து மரியாதை செய்தனர் இங்கு வாழ் மக்கள்..
அவர் திருஉருவச்சிலை வைத்தனர்.,பெயர் சூட்டினர்,
நிலத்தில் பச்சிளம் புல்மெத்தை, பசுமை மரங்கள்...
.குழந்தைகள் ஓடிவிளையாடலாம்...,பெரியவர்கள்
ஓய்ந்திருக்கலாம்..,வாழ்க்கைச் சுமையை
இறக்கி வைக்கலாம், பரஸ்பரம் பங்கு வைக்கலாம்..,
மந்திரி மாளிகைகள், பணம் படைத்தோர்
குடியிருப்புக்கள் இருக்கும் பகுதிகளில் மட்டும்தான்
இதுக்கெல்லாம் பணம் செலவிடுறாங்க,
கடைத்தெரு பக்கம் நாதியற்று கிடந்த
இந்த பூங்காவை, போனாபோகட்டுமுண்ணு
நம்மைப்போன்ற சாதாரண குடிமக்களுக்காகவும்
இத்தனைக்கு அழகுபடுத்தினாங்களே...” -இவ்வாறு
சுற்றியுள்ள ஆரவாரத்தினிடையிலும் அமைதித்தீவென
கிட்க்கும் என்னைப்பற்றி இங்கு வருகிறவர்கள்
பேசுவதைக் கேட்டு பெருமை கொண்டேன்.....
ஆண்டாண்டு பிதாமஹனின் ஜயந்தி நாளன்று
பூமாலை கொடிதோரணங்களென்று களை கட்டும்..
யார் கண் பட்டதோ, இதொன்றும் அதிகம் நாள்
நீடிக்க வில்லை....சோர்வில்லா சொல் வல்லவர்கள்,
சாதி,மத,அரசியல் பிர்சாரகர்கள், பாட்டுக்காரர்கள்,
ஆட்டகாரர்கள் சதஸினர் இங்கே இலவசமாய்
கிடைத்ததில் அகம் குளிர்ந்து ஒலி பெருக்கித்
துணையோடு தம் கைவரிசையை
அமர்க்களப்படுத்தத் துவங்கினர்.....
அமைதியை நாடி வந்தவர்கள் மிரண்டோடினர்...
அது போதாதென்று ஆட்சியின் தலை மையமான
செயலக வாசலில் எப்போதும் நடைபெற்றுவரும்
மறியல், ஆர்ப்பாட்டங்களால் நெடுஞ்சாலை
போக்குவரத்து பாதிக்கப்பட்டு அவதிப்படும்
பொதுமக்களுக்கிரங்கிய ஒரு அரசியல் பிரமுகர்
செயலக வாசலை ஆர்ப்பாட்டங்களிலிருந்து
விமுக்தியுறச்செய்து போராட்டக்களம்
அங்கிருந்து அப்புறப்படுத்த பிதாமஹன்
காட்டிய அறப்போர் பாணியில் உண்ணாநோன்புக்கு
இவ்விடத்தில் வந்து சேர.......
வாழ்த்த வந்த அரசியல்வாதிகள், அமைச்சர்கள்
ஒலிபெருக்கி முன்நின்று ஓவென்ற உரிமை முழக்கம்.
அவர் பாணியை பின்பற்றி இனி எல்லோரும்
போராட்டக்களம் செயலக வாசலிலிருந்து
இங்கே மாற்றி விடுவார்களோ என எங்கள் வயற்றில்
நெருப்பு..... ஒலிமாசின் கோர தாக்கலில்
இங்கிருந்து தப்பித்துக்கொண்டு என்னைப்போல்
ஓட முடியாத பிதாமஹன் என்னிடம் கேட்கிறார்;
என் அடிச்சுவட்டில் வந்ததாய் சொல்லிக்கொள்ளும்
இவர்களுக்கு உள்ளையும் புறத்தையும்
தூய்மைப்படுத்தி சாந்தி நிலவிட மௌனவிரதத்தையும்
போதித்தேனே....,அதை ஏன் மறந்தனர்.......?     

Sunday, January 19, 2014

வெட்கமில்லை

     கவிதை                      
 
வெட்கமில்லை
 நீல பத்மநாபன்
            கடல் கடந்த ராவண தேசத்தில்
            இப்போதும் சிறார்கள் கல்வி
            பயின்றுகொண்டிருக்கும்
            பழம்பெரும் கல்விக்கூடமொன்றை
          இடித்து படையாளிகளின் பாசறையாக்கிய
            கொடுமையை உலகச் செய்தி ஊடகங்கள்
            பாரெல்லாம் பறைச்சாற்றி பகிரங்கப்படுத்தின...
            ராம ராஜ்யத்தில் பரசுராமன் கடலிலிருந்து
            கவர்ந்தெடுத்து  தானம் தந்த தெற்கு தெற்கொரு
            தேசத்தின் தலைநகர் மத்தியில்
            வரலாற்றுப்புகழ் வாய்ந்த, பொன்விழா கண்ட
            பழம்பெரும் அரசு பள்ளி ஒன்றுண்டு கேளீர்....
            இப்போதும் ஏழைப்பாழைகளுக்கு
            இலவசக் கல்வி அளிக்கும் உயர்நிலைப்பள்ளி..
          யாவரையும்  வரவேற்கும், கிளை பரப்பி உயர்ந்தோங்கி நிற்கும்
            மருத்துவ மகத்துவம் கொண்ட நொச்சி மரம்....,
              மணலில் காலூன்றி காலங்காலமாய்
            தவம் செய்யும் பூவரசு விருட்சங்கள்.......,
            வேறெங்கும் தென்படாத அரிதிலும் அரிதான
        சுவையான கனி தரும் பசக்க மரம், அழின்னி மரம்....
           பள்ளிக்குள் மட்டுமா, சுற்றுப்புற மாசுக்களை அகற்றி
            பசுமையாய் நிழல் விரித்து நிற்கும்
            இயற்கையின் வரப்பிரசாதம்......          
            வெட்டிமுறித்தகோட்டை பக்கம் அமைந்த
            பள்ளியை இடித்து தரைமட்டமாக்க தீர்மானமான
            கையோடு, மரங்களையும் வெட்டிமுறிக்கப்
            போகிறார்களாம்...,வேரோடுச்சாய்க்கப்போகிறார்கள்...
            பஸ்நிலையம் கட்டுவதா....?
            கடைக் கண்ணிகள் செய்வதா...??.
            இல்லே.......,குப்பைகொட்டிக் குவிப்பதா......???
            முடிவெடுக்க, சம்பந்தப்பட்ட மெத்தப்படித்த
            வித்தகர்களின் கலந்தாலோசனை மும்முரம்.....

            யாருக்கும் வெட்கமில்லை என சங்கநாதமாய்
            கவிபாடி உணர்வூட்ட புரட்சிக்கவியில்லை
            அங்கின்று......! இருப்பதெல்லாம் குரல்வளமில்லா
            வெறும் ஒரு “பாட்டாளி”...........
           
                          
           




                        
    


Monday, November 25, 2013

துளஸி


கவிதை       
                                    துளஸி
                               நீல பத்மநாபன்
     புதுவீடு கட்டி மனைவி மக்களுடன்
     குடிவந்து சில நாட்களில்
     முற்றத்து சிமண்ட் தரையில்
     பூ ஜாடியொன்று வாங்கி வந்து
     உன்னை நட்டு நீர் வார்த்து ஆசையுடன்
     வளர்த்தத் துவங்கினாள் வீட்டுக்காரி.
     பெரிய ஈடுபாடில்லாதிருந்தும்
     கொண்டவள் ஆசைக்கு குறுக்கே நிற்கவில்லை,,,
           காலைக் குளியலின் புத்துணர்ச்சியில்
     பக்திப்பரவசத்துடன் முற்றத்தில் வந்து
     நீயிருக்கும் ஜாடியிலும் உன் இலைகளிலும்
     குங்கும பொட்டிட்டு இறை துதிகள்
     ஜபித்தவாறு கண்மூடி நின்று உனையும்
     எதிர் திசையிலிருந்து உன் மீது இளம் கதிர்களை
     வாரி இறைக்கும் பால சூரியனையும்
           நமஸ்கரிக்கும்    பொழுதுகள்.....
     விசேஷ தினங்களில் ஊதுவத்திப்புகையாலும்
     கற்பூர ஆரவத்தியாலும் சேவை...
          இப்பொ சில நாட்களாக மேல் சன் ஷேடில்
     குடியேறிய புறாக்களின் கும்மாளம்..
    கும்பிட்டு நிற்பவள் மீது அடிக்கடி நிகழ்ந்த
    எச்சாபிஷேகத்தில் வெகுண்டு
    கிழக்கில் உதிக்கும் சூரியன் மீதா தலைக்கு மேலே
    தருணம் பார்த்து நிற்கும் புறாக்களின் மீதா
    கவனம் செலுத்துவது என தத்தளிக்கும் மனதில்
    உன்னை பிரதிஷ்டிக்கும் அப்பியாசம் தெரியாது
    உனை சேவிப்பதலிருந்த பழைய வேகம்
    மெல்ல குறைவது தெரிந்தது....
    அதோடு குழந்தைகள் கூட கொஞ்ச நாட்கள்
    இருந்துவிட்டு வர அவள் வெளியூர் பயணம்...
        முதலில் சில நாட்கள் அலட்டிக்கொள்ளாத நெஞ்சம்..
    நாள் செல்லச்செல்ல தன் தனிமையுடன்
    உன் தனிமையும் சேர்ந்துகொண்டபோது..
    உள்ளுக்குள் என்னமோ ஒரு .......
    சொல்லத்தெரியவில்லை....
    வெயிலில் நீ வாடி வதங்கி நிற்பதைக் காணும்போது...
    சகிக்கமுடியா மன அவசம்.....
    இப்போதெல்லாம் காலை மாலை வேளைகளில்
    பூஜை அறை புகும் முன்
    ஒரு குவளை நீர் உனக்கு வார்க்கும் போது
    இந்நாள் வரை வெறு யாரிடமிருந்தும்
    கிடைத்தறியா  ஒட்டுணர்வு......


    

     

Sunday, October 27, 2013

கசிவு

   கவிதை
                        கசிவு
                                     நீல பத்மநாபன்
                                        
                            உணர்ச்சிகள் குமுறிக் கொந்தளித்துக்
            கொண்டிருந்த காலத்திலெல்லாம்
            நேரம் காலமில்லாது
            உணர்ந்தும் உணராமலும் அதன்போக்கில்
            வெளியேறிக்கொண்டிருந்த
            படைப்பின் விந்துத்துளிகள்....
            இப்போதும்
            உணர்ச்சிகள் குமுறிக்கொண்டுதானிருக்கின்றன...
            கொந்தளித்துக்கொண்டுதானிருக்கின்றன....
            ஆனால்......
            அமித ஆவேசத்தின் அலைவீச்சில்லை
            வெளியேற்ற, சுயப்பிரக்ஞையுடன்.
            மீறி, வெகுண்டெழுந்துவிடமுனைந்தால்
            பின்னின்றுப்பிடித்திழுத்து முடக்கிவிடும்
            ஒழுக்கு, ஒழுக்க நிவாரணிகள்.....
            இருந்தும், மூளையின் இசைவின்றியே
            யாருக்காகவோ கசிந்துகொண்டிருக்கும்
            செயல்வலு குன்றாத  
            சிருஷ்டியின் கருத்துளிகள்.....




            

Friday, July 5, 2013

முறையீடு

     கவிதை
                   முறையீடு
                               நீல பத்மநாபன்
         மதிப்பிற்குரிய அமைச்சர் அவர்களே..
         அரசு தந்த வாக்குறுதியை மீறியதினால்
         அதோகதியான ஒரு சாதாரண் குடிமகனின்
         கண்ணீரில் குதிர்ந்த முறையீடு இது....
         “பள்ளித்தலமெல்லாம் கோயில் செய்வோம்
         என்று தேசீய மாகவிஞர் பாடியிருப்பது
         தங்களுக்குத் தெரியாதிருக்குமோ.... தெரியல்லே
                    கல்வி கற்பிக்கும் பள்ளித்தலம்
        வாக்தேவதை குடியிருக்கும் கோயிலன்றோ
        அதை கோயிலாய் பராமரிக்கவேண்டாமோ...
        நகரமத்தியில் வேருறைத்த இப்பழம்பெரும்
         கல்விகூடத்தை ஈவிரக்கமில்லாது அழித்துத்தான்
         நவீன பஸ் நிலையம் கட்டவேண்டுமா..?
                  எத்தனை எத்தனை புகழ் வாய்ந்த மகான்கள்
        குருபூதர்களாய் இங்கு கல்வி புகட்டினார்கள்..!
        எத்தனை எத்தனைபேர்களின் அறிவுக்கண்ணை
        அகலத்திறக்கவைத்து அறிவுமதிகளாகக்
        காரணமாக இருந்த கல்விச்சாலை!!
                  பெற்ற தாய் ஹத்யைப்போல் பாபமல்லவா
        எண்ணும் எழுத்தும் போதித்த இறைவிடமென
        போற்றும் பள்ளிக்கூடத்தை அழிப்பது!
        என்னைப்போல் எத்தனை ஏழைப்பாழைகளுக்கு
        இலவசக்கல்வி அளித்துக்கொண்டிருக்கும்
        அரசு உயர்நிலைப்பள்ளி.......!
        பஸ்நிலையத்திற்கென ஆர்ஜிதம் பண்ணிவிட்டு
        குப்பை கொட்டமாட்டீர்களென்பதற்கு
        என்ன உத்தரவாதம், நவீனக் கடைக்கண்ணிக்கென்று
        இடம் ஆர்ஜிதம் பண்ணிவிட்டு இப்பொ
        குப்பைமேடாக்கி அதை பதப்படுத்தும்
        தொழிற்சாலை துவங்கப்போவதைப்போல்!
                      *   *    *
                  அன்று யாருக்கும் வேண்டாத எருமைக்குழியருகில்
       குடும்பசொத்து-மூணு சென்ட் பூமியில் குடிசைகட்டி, குடும்பம்,
       அங்கேயே சின்ன பெட்டிக்கடை,சுற்றி தென்னை,வாழைகள்
       என்று எப்படியோ வயிற்றைக் கழுவிக்கொண்டிருந்தோம்...
       அப்போதான் எங்க இடத்தையும் சுற்றுவட்ட
     தென்னந்தோப்பையும் எல்லாம் அரசாங்க ஆளுங்க
     வந்து அளந்தாங்க....படம் வரச்சாங்க.....
     என்னா ஏதூன்னு விசாரிச்சப்பொ தெரிஞ்சுது,
     புதிசா கடைக்கண்ணி கட்டப்போறாங்க,
     இந்த இடத்தையெல்லாம் ஆர்ஜிதம் செய்யப்போறாங்க...
     அப்படின்னால் எங்களையெல்லாம் தெருவில்
     தூக்கியெறியப்போறாங்களா.......?பெரிய முதலாளிகளுக்கு
     ஒண்ணுமில்லை....என்னைப்போன்ற சிறிய வியாபாரிகள்
     என்னசெய்வோம், எப்படிப்பிழைப்போம்...
     -அப்படித்தான், எங்கள் வார்ட் கௌன்ஸிலர்,
      தொகுதி எம்.எல்.எ.-இப்படி மக்கள் பிரதிநிதிகள் உங்களை
      எல்லாம் நாடிவந்தோம்.. நீங்க எல்லோரும் சொன்னீங்க;        
      “சாலை பஜார் இப்ப மூச்சுத்திணறுது,
      யாருக்கும் நடந்தோ வாகனத்திலோ வந்து நிம்மதியா
      எதுவும் வாங்க முடிவதில்லே, நடக்க இடமில்லே,
      வண்டிபோட இடமில்லே...கடைக்காரங்க மொத்தமாய்
      கொள்முதல் செய்துகொண்டு வரும் சரக்கு லாரிகள்,
      ட்ரக்குகள் கடைவீதிக்குள்ளே புகமுடியாத நெருக்கடி.....
      நூறாண்டுகளுக்கு முன்னால் மன்னர் காலத்தில்
      செய்யப்பட்ட அகலம் குறைந்த அங்காடி...
      சாலை பஜாருக்கு சமாந்தரமாக தெற்கில் கிடக்கும்
      உங்க குறுகிய தெருவை அகலப்படுத்தப்போகிறோம்..
      எருமைக்குழியைச்சுற்றியுள்ள இடத்தையெல்லாம்
      ஆர்ஜிதம் பண்ணி அரசின் நகர அபிவிருத்தக்குழு
      நவீன அங்காடி வரிசை அங்கெ கட்டி
      கடைகளை உங்களைப்போன்ற தேவையான                           
      வியாபாரிகளுக்குத் தரப்போகிறது...
.      ஜனங்களுக்கு வசதியாக நடந்தோ, வாகனங்களிலோ
      வந்து சகல விதமான சாமான்களும் வாங்கலாம்.
      வேலை முடியட்டும், அங்கே உங்களுக்கும் கடைநடத்த
      இடம் தரச்செய்ய வேண்டியது எங்கள் பொறுப்பு...
     அதுவரை எப்படியாவது சமாளியுங்க......
 -இப்படிநீங்க வாக்குறுதித் தந்து பத்து பதினஞ்சு
 வருசத்துக்கும் மேலிருக்காதா.....! இடைக்காலத்தில்
 நீங்க எல்லா கட்சிக்காரங்களும் மாறி மாறி
 ஆட்சிபீடம் ஏறி இறங்கீட்டீங்க..
     உங்க ஆசைவார்த்தைகளை நம்பி
     குடியிருந்த பூமியை விட்டு தந்தோம்...
     வசதி படைச்சவங்களுக்கு ஒண்ணும் இல்லை..
     எத்தனை காலம் பட்டினிகிடப்பதென்று, என்னைப்போன்ற
     மற்றவங்க கிடைச்ச அற்பப் பணத்தை வாங்கிகிட்டு
    ஊரை விட்டே போயிட்டாங்க...
    நான் எங்கே போவேன்...என்ன செய்வேன்....
    உங்களை எல்லாம் எத்தனையெத்தனை வாட்டி
    வந்து பார்த்திருப்பேன்...!நீங்க சொன்னவாறு
    எத்தனையெத்தனை கருணை மனுக்கள்.....!
    சும்மா கிடந்த இடத்தில் குப்பை கொட்டி கொட்டி....
    இப்ப வெறும் குப்பைமேடு....
    இப்ப நகர அபிவிருத்திக்குழுவே மனமுவந்து
    குப்பைக்கூளத்தை பதனிடும் தொழிற்சாலைக்கு
    கொடுத்துவிட்டாங்களாம்...நகரசபைக்கும் சம்மதம்...
    தேசீய நெடுஞ்சாலை...பள்ளிக்கூடம், பெருமாள், கண்ணகிக்
    கோயில்கள், மசூதி இவற்றின் பக்கத்தில் கிடக்கும் இடம்..
    எங்களைப் போன்ற வியாபாரிகளுக்காக ஆர்ஜிதம் செய்த இடம்...
    உங்க எல்லோரையும், அரசில் சம்பந்தப்பட்டவங்களையும் எல்லாம்
    வந்து பார்த்தோமே...எல்லோருமா உண்ணாநோன்பு போராட்டம்
    கூட நடத்திப்பார்த்தோமே..  உங்க யாருக்கும்
    மனம் கனியவில்லையே...எங்க வாழ்வு மண்ணானது மட்டுமா..
    சுற்றுப்புற மாசின் நஞ்சால் எங்களுக்கெல்லாம் தீராத அவதி..
                             * * *
    அடுத்ததாக இப்ப என்னைப்போன்ற ஏழைப்பாழைகள்
    எழுத்தை கூட்டி வாசிக்கவாவது படித்த இந்த
    அரசுப்பள்ளியை பஸ்நிலையம் எனச்சொல்லி
    கைவைத்திருக்கீங்களே....நவீன அங்காடி காம்ப்ளக்ஸ்
    குப்பைக்கூள பாக்டரி ஆனதுபோல்
    இந்த பள்ளித்தலமும் ஆகிவிடாது
    என்பதுகென்ன உத்தரவாதம்.......?