Wednesday, May 25, 2022

உப்பு

ரத்தத்தில் கலந்திருந்த உப்பெல்லாம்

எங்கே, போய் தொலைந்ததோ? ஏனோ..?

சோடியம் குறைந்து விட்டதென்று,

மூன்று நேர உணவில்

உப்பைச் சேர்த்துக்கொள்ள

தண்டனை விதித்தார்கள் மருத்துவர்கள்--

யூறாளஜியும், நியோறஜியும்…..!

உப்பில்லா பண்டம் குப்பையிலே….,

உப்பிட்டவரை உள்ளளவும் நினை….

--பழமொழிகள்…,

உப்பைபோல் நேசிக்கிறேன் என்ற

புத்திரியை நாடு கடத்திய மன்னவர்

கடைசியில் தவறை உணர்ந்து

பச்சாதபித்த பழங்கதை..,

--இவையெல்லாம் இப்போ

ஞாபகத்தில் வர

உணவு நேரங்கள் மூன்றையும்

விதிக்கப்பட்ட தீரா தண்டனையாய்

உணவில் உப்பை அள்ளிப்போட்டு

உள்ளே கொட்டி, உயிர் தரித்து,

கருணைக் கொலையைக்

காத்திருக்கும் நிலைமை……..

 

நீல பத்மநாபன் 10—1—2022


No comments: