Monday, June 28, 2010

தாத்தாவின் கட்டில்

தாத்தாவின் கட்டில்

கொல்லையில் பலாமரத் தையொன்று
நட்டு ஆசையுடன் நீர் வார்த்து
தளிர் வருதா தண்டு வளருதா என்று
ஆர்வமுடன் வளர்த்தினாள் பாட்டி
ஆண்டாண்டு பள்ளிவிடுமுறைக்கு
பலாப்பழ ஆசை அலைமோத
பாட்டிவீடு வரும் பேரன்பேத்திகள் நாங்கள்
நெடுமால் திருவாய்
நெடுநெடுவென மேலே மேலே
வளர்ந்து உயரும் மரம்
கிளைபோடவில்லை
பூக்கவில்லை..காய்க்கவில்லை
ஆடிக்காற்றில் அடிபதறி
அய்யோவென்றுஒருநாள்
தலைசாய்ந்த கோரம்
விறகாக்க வந்தவர்களை விரட்டிவிட்டு
ஒட்டுமரப்பலகைப் பிய்ந்து
அவலட்சணமாய்க் கிடந்த கட்டிலில்
தலைச்சாய்த்த பலாமரத்தாய்த்தடியை
பலகைகளாக்கி பரப்பிமெருகு பண்ணி
அவர் சயனிக்கும் சூரல் இழைக்கட்டிலின்
பக்கவாட்டில் போட்டுக்கொண்டார் தாத்தா
பாட்டி,அம்மா,சித்தி,மாமா,மாமி யாரும்
அந்த கட்டிலின் பக்கம் போகவேயில்லை
பாவம், தாத்தா மட்டும் கிடக்கிறாரேயென்று
படுக்கச்சென்ற பேரன் பேத்திகள் எங்களையும்
வேண்டாம், உடம்பு வலிக்கும்,
தூக்கத்தில் கீழே விழுந்துடூவீங்க
-ஒரேயடியாய் தடுத்துவிட்டாள் பாட்டி
*
முற்றத்தில் கொணர்ந்து போட்டிருக்கும்
அந்தகட்டிலில் தாத்தாவின் வெற்றுடம்பு
தலையில் எண்ணைத் தேய்க்கிறார்கள்
குளிர்ந்த நீர்விட்டு குளிப்பாட்டுகிறார்கள்
பட்டையாய் திருநீறிட்டார்கள்
வாய்க்கரிசி போட்டார்கள்
சுற்றிவந்து மாரடித்து
ஒப்பாரி வைத்தார்கள்
நாங்களும் அழுதோம்
அன்றொருநாள் எங்களிடம் தாத்தா
‘எனக்கிந்த கட்டில் பயன்படும் ஒருநாள்’
என்று சொன்னது இதைத்தானா

நீல பத்மநாபன்

1 comment:

G Radhakrishnan said...

A brief pep into the irony of life. The Poet has done it in a symbolic manner.