Wednesday, June 20, 2012

ஒரு நடுநிசிநேர தெருக்கூத்து


கவிதை

ஒரு நடுநிசிநேர தெருக்கூத்து

நீல பத்மநாபன் 

     நடுநிசி பனிரெண்டைத் தாண்டிவிட்டநேரம்கெட்ட
     நேரமதில் இரண்டு மணிநேரம் தாமதமாகி          
     வேண்டாவெறுப்போடுசொந்த ஊர் வந்துநின்ற
     ரயிலில் இருந்து மனைவி,மகள்,கைப்பெட்டியுடன்
     எப்படியோ இறங்கும்போதுகளைத்துத்துவளும்
     உடம்பும் உள்ளமும்;தள்ளாமையில் தள்ளாடும்
     தேகத்தைத் தள்ளிக்கொண்டு படிகள் ஏறி இறங்கி
     ”ப்ரீ பெயிட்” ஆட்டோ கௌண்டர் முன் நெடுநீள க்யூ
     வரிசை;ஆட்டோ கிடைத்தால் பத்துநிமிஷபயணத்தில்
     வீடுபோய்ச்சேர்ந்துவிடுவோமே என்ற நப்பாசையுடன்
     உடல் உபாதைகளை அடக்கிநிறுத்த முயன்றவாறு
     காத்துநிற்கும் கடின யக்ஞம்....
     அப்பாடா, தன்முறை வந்துவிட்டது,கடவுளுக்கு நன்றி,
     உள்ளிருக்கும் போலீஸ்ச்சிப்பந்தியிடம் ஆட்டோ
     ஓட்டியிடம் கொடுக்கவேண்டிய ஆட்டோக்கூலிக்கான
     சீட்டுக்காக சில்லறையை நீட்டியவாறு ‘சரஸ்வதிநகர்
     பைபாஸ் ’என்றார் பலகீனமாய். ’அப்படியொரு பைபாஸே
     இல்லையே,கிள்ளிப்பாலம்,இல்லாட்டி அட்டக்குளங்கரை,
     சீக்கிரம் சொல்லுங்கோ’என்று கத்தினான்   
     எரிச்சலுடன்.செக்கச்சிவந்த அவன் கண்கள்,தூக்கக்
     கலக்கமா....இல்லை வேறு கிறுக்கமா...   பின்பக்க அடுத்தமுரட்டுஆள் இவரை நெட்டித்தள்ளி   முந்திக்கொண்டு சில்லறையை நீட்டி’பேயாடு’என அவன்  
      இடப்பெயரைப்புகல,உள்ளிருந்து போலீஸ்பாணியில் இவரிடம்       ‘நீங்கி நில்லுங்கோ’என   கட்டளை;பக்கவாட்டில் நின்ற       காக்கிஉடை ஆட்டோஓட்டி,வீடெங்கேன்னுகூட தெரியாதா
       என கிண்டல் அடிக்க,அடுத்தடுத்து கவுண்டருக்குள்
       கை நுழைத்து இடப்பெயர் சொல்லி சீட்டுவாங்கி           
       ஓடிவந்து நிற்கும் ஆட்டொவில்விரைகிறவர்கள், 
        ஏனயோர்கள் இளக்காரமுடன் பார்வையை எறிந்திட
        முன்பு நேரம் கெட்ட நேரத்தில் ஒருதடவை
        கிள்ளிப்பாலத்தில்,இன்னொரு தடவை நடுமதிய
        வேனாவெயிலில் அட்டக்குளங்கரையில் இறக்கிவிட்டு
        ஆட்டோ ஓடிவிட ,வேறு வழியின்றி மூட்டைமுடிச்சுடன்
        நடக்க நேர்ந்த கசப்பான முன் அனுபவம்....
        ’சரஸ்வதி நகர் பெயர்பலகை இருக்கு, சரஸ்வதி நகர்
         ரெஸிடண்ட்ஷியல் அஸோஸியேஷன்     பதிவுச்செய்யப்
         பட்டது’ என்றெல்லாமென்ற இவர் முறையீடுகளுக்கு
         செவிசாய்க்கும் மூடில் இல்லை உள்ளிருப்பவன்.
         ’அதெல்லாம் தெரியாது,இங்கே எங்க லிஸ்டில் இல்லை’  
‘கங்கா நகர், யமுனா நகரெல்லாம் இருக்கு,சரியா
யோசிச்சுப்பாருங்கோ,சொந்த வீடிருக்கும் இடம்கூடத்
தெரியாதா தாத்தா’-பக்கப்பாட்டுப் பாடி தூபம் போட்டான் ஆட்டோ ஓட்டி..கங்கையமுனை சங்கமத்தில்
சரஸ்வதி ஊனக்கண்களுக்கு புலனாகாது என்ற தத்துவ
போதனையா?அரை நூற்றாண்டுக்கும் மேலாக வாழ்ந்து,
துறக்க காத்திருக்கும் விட்டை அடைவதுஎப்படி
என்பதை என்னசொல்லிஇவர்களைப் புரியவைப்பது?
ஆட்டோ ஓட்டிச் சொல்வதிலவியப்பதற்கில்லை,
பொதுமக்களுக்கு நியாயம் வழங்கும் காவல்
சிப்பந்தியுமா?பின்னால் வரிசையிலிருந்து
விரைந்து வருகிறவர்களின் முட்டிமோதல்..
கிறுகிறுக்கும் தலை, நிலை தடுமாறியது..
‘புத்தன்கோட்டைக்குத் தாறேன்’குரலில் கேலி?
ஊரின் பழமையான சுடுகாடிருக்கும்இடம்,
சரஸ்வதிநகர் பைபாஸ் ஜங்க்‌ஷன் வழியும்செல்லலாம்
தன் வீட்டுக்கு அந்த ஜங்க்‌ஷனில் இறங்கி கொஞ்சம்
நடக்கணும்....ஒண்ணுக்கு ரெண்டாய் அவன் எழுதித்தந்த
இரு மடங்கு ஆட்டோகூலிசீட்டை வாங்கி ஆட்டோ ஓட்டி கையில் கொடுத்துவிட்டு மனைவி மகள் ஏறியபின் ஆட்டோவிலேறி உட்கார்ந்தார் நடைப்பிணமாய்.....