Monday, November 25, 2013

துளஸி


கவிதை       
                                    துளஸி
                               நீல பத்மநாபன்
     புதுவீடு கட்டி மனைவி மக்களுடன்
     குடிவந்து சில நாட்களில்
     முற்றத்து சிமண்ட் தரையில்
     பூ ஜாடியொன்று வாங்கி வந்து
     உன்னை நட்டு நீர் வார்த்து ஆசையுடன்
     வளர்த்தத் துவங்கினாள் வீட்டுக்காரி.
     பெரிய ஈடுபாடில்லாதிருந்தும்
     கொண்டவள் ஆசைக்கு குறுக்கே நிற்கவில்லை,,,
           காலைக் குளியலின் புத்துணர்ச்சியில்
     பக்திப்பரவசத்துடன் முற்றத்தில் வந்து
     நீயிருக்கும் ஜாடியிலும் உன் இலைகளிலும்
     குங்கும பொட்டிட்டு இறை துதிகள்
     ஜபித்தவாறு கண்மூடி நின்று உனையும்
     எதிர் திசையிலிருந்து உன் மீது இளம் கதிர்களை
     வாரி இறைக்கும் பால சூரியனையும்
           நமஸ்கரிக்கும்    பொழுதுகள்.....
     விசேஷ தினங்களில் ஊதுவத்திப்புகையாலும்
     கற்பூர ஆரவத்தியாலும் சேவை...
          இப்பொ சில நாட்களாக மேல் சன் ஷேடில்
     குடியேறிய புறாக்களின் கும்மாளம்..
    கும்பிட்டு நிற்பவள் மீது அடிக்கடி நிகழ்ந்த
    எச்சாபிஷேகத்தில் வெகுண்டு
    கிழக்கில் உதிக்கும் சூரியன் மீதா தலைக்கு மேலே
    தருணம் பார்த்து நிற்கும் புறாக்களின் மீதா
    கவனம் செலுத்துவது என தத்தளிக்கும் மனதில்
    உன்னை பிரதிஷ்டிக்கும் அப்பியாசம் தெரியாது
    உனை சேவிப்பதலிருந்த பழைய வேகம்
    மெல்ல குறைவது தெரிந்தது....
    அதோடு குழந்தைகள் கூட கொஞ்ச நாட்கள்
    இருந்துவிட்டு வர அவள் வெளியூர் பயணம்...
        முதலில் சில நாட்கள் அலட்டிக்கொள்ளாத நெஞ்சம்..
    நாள் செல்லச்செல்ல தன் தனிமையுடன்
    உன் தனிமையும் சேர்ந்துகொண்டபோது..
    உள்ளுக்குள் என்னமோ ஒரு .......
    சொல்லத்தெரியவில்லை....
    வெயிலில் நீ வாடி வதங்கி நிற்பதைக் காணும்போது...
    சகிக்கமுடியா மன அவசம்.....
    இப்போதெல்லாம் காலை மாலை வேளைகளில்
    பூஜை அறை புகும் முன்
    ஒரு குவளை நீர் உனக்கு வார்க்கும் போது
    இந்நாள் வரை வெறு யாரிடமிருந்தும்
    கிடைத்தறியா  ஒட்டுணர்வு......


    

     

Sunday, October 27, 2013

கசிவு

   கவிதை
                        கசிவு
                                     நீல பத்மநாபன்
                                        
                            உணர்ச்சிகள் குமுறிக் கொந்தளித்துக்
            கொண்டிருந்த காலத்திலெல்லாம்
            நேரம் காலமில்லாது
            உணர்ந்தும் உணராமலும் அதன்போக்கில்
            வெளியேறிக்கொண்டிருந்த
            படைப்பின் விந்துத்துளிகள்....
            இப்போதும்
            உணர்ச்சிகள் குமுறிக்கொண்டுதானிருக்கின்றன...
            கொந்தளித்துக்கொண்டுதானிருக்கின்றன....
            ஆனால்......
            அமித ஆவேசத்தின் அலைவீச்சில்லை
            வெளியேற்ற, சுயப்பிரக்ஞையுடன்.
            மீறி, வெகுண்டெழுந்துவிடமுனைந்தால்
            பின்னின்றுப்பிடித்திழுத்து முடக்கிவிடும்
            ஒழுக்கு, ஒழுக்க நிவாரணிகள்.....
            இருந்தும், மூளையின் இசைவின்றியே
            யாருக்காகவோ கசிந்துகொண்டிருக்கும்
            செயல்வலு குன்றாத  
            சிருஷ்டியின் கருத்துளிகள்.....




            

Friday, July 5, 2013

முறையீடு

     கவிதை
                   முறையீடு
                               நீல பத்மநாபன்
         மதிப்பிற்குரிய அமைச்சர் அவர்களே..
         அரசு தந்த வாக்குறுதியை மீறியதினால்
         அதோகதியான ஒரு சாதாரண் குடிமகனின்
         கண்ணீரில் குதிர்ந்த முறையீடு இது....
         “பள்ளித்தலமெல்லாம் கோயில் செய்வோம்
         என்று தேசீய மாகவிஞர் பாடியிருப்பது
         தங்களுக்குத் தெரியாதிருக்குமோ.... தெரியல்லே
                    கல்வி கற்பிக்கும் பள்ளித்தலம்
        வாக்தேவதை குடியிருக்கும் கோயிலன்றோ
        அதை கோயிலாய் பராமரிக்கவேண்டாமோ...
        நகரமத்தியில் வேருறைத்த இப்பழம்பெரும்
         கல்விகூடத்தை ஈவிரக்கமில்லாது அழித்துத்தான்
         நவீன பஸ் நிலையம் கட்டவேண்டுமா..?
                  எத்தனை எத்தனை புகழ் வாய்ந்த மகான்கள்
        குருபூதர்களாய் இங்கு கல்வி புகட்டினார்கள்..!
        எத்தனை எத்தனைபேர்களின் அறிவுக்கண்ணை
        அகலத்திறக்கவைத்து அறிவுமதிகளாகக்
        காரணமாக இருந்த கல்விச்சாலை!!
                  பெற்ற தாய் ஹத்யைப்போல் பாபமல்லவா
        எண்ணும் எழுத்தும் போதித்த இறைவிடமென
        போற்றும் பள்ளிக்கூடத்தை அழிப்பது!
        என்னைப்போல் எத்தனை ஏழைப்பாழைகளுக்கு
        இலவசக்கல்வி அளித்துக்கொண்டிருக்கும்
        அரசு உயர்நிலைப்பள்ளி.......!
        பஸ்நிலையத்திற்கென ஆர்ஜிதம் பண்ணிவிட்டு
        குப்பை கொட்டமாட்டீர்களென்பதற்கு
        என்ன உத்தரவாதம், நவீனக் கடைக்கண்ணிக்கென்று
        இடம் ஆர்ஜிதம் பண்ணிவிட்டு இப்பொ
        குப்பைமேடாக்கி அதை பதப்படுத்தும்
        தொழிற்சாலை துவங்கப்போவதைப்போல்!
                      *   *    *
                  அன்று யாருக்கும் வேண்டாத எருமைக்குழியருகில்
       குடும்பசொத்து-மூணு சென்ட் பூமியில் குடிசைகட்டி, குடும்பம்,
       அங்கேயே சின்ன பெட்டிக்கடை,சுற்றி தென்னை,வாழைகள்
       என்று எப்படியோ வயிற்றைக் கழுவிக்கொண்டிருந்தோம்...
       அப்போதான் எங்க இடத்தையும் சுற்றுவட்ட
     தென்னந்தோப்பையும் எல்லாம் அரசாங்க ஆளுங்க
     வந்து அளந்தாங்க....படம் வரச்சாங்க.....
     என்னா ஏதூன்னு விசாரிச்சப்பொ தெரிஞ்சுது,
     புதிசா கடைக்கண்ணி கட்டப்போறாங்க,
     இந்த இடத்தையெல்லாம் ஆர்ஜிதம் செய்யப்போறாங்க...
     அப்படின்னால் எங்களையெல்லாம் தெருவில்
     தூக்கியெறியப்போறாங்களா.......?பெரிய முதலாளிகளுக்கு
     ஒண்ணுமில்லை....என்னைப்போன்ற சிறிய வியாபாரிகள்
     என்னசெய்வோம், எப்படிப்பிழைப்போம்...
     -அப்படித்தான், எங்கள் வார்ட் கௌன்ஸிலர்,
      தொகுதி எம்.எல்.எ.-இப்படி மக்கள் பிரதிநிதிகள் உங்களை
      எல்லாம் நாடிவந்தோம்.. நீங்க எல்லோரும் சொன்னீங்க;        
      “சாலை பஜார் இப்ப மூச்சுத்திணறுது,
      யாருக்கும் நடந்தோ வாகனத்திலோ வந்து நிம்மதியா
      எதுவும் வாங்க முடிவதில்லே, நடக்க இடமில்லே,
      வண்டிபோட இடமில்லே...கடைக்காரங்க மொத்தமாய்
      கொள்முதல் செய்துகொண்டு வரும் சரக்கு லாரிகள்,
      ட்ரக்குகள் கடைவீதிக்குள்ளே புகமுடியாத நெருக்கடி.....
      நூறாண்டுகளுக்கு முன்னால் மன்னர் காலத்தில்
      செய்யப்பட்ட அகலம் குறைந்த அங்காடி...
      சாலை பஜாருக்கு சமாந்தரமாக தெற்கில் கிடக்கும்
      உங்க குறுகிய தெருவை அகலப்படுத்தப்போகிறோம்..
      எருமைக்குழியைச்சுற்றியுள்ள இடத்தையெல்லாம்
      ஆர்ஜிதம் பண்ணி அரசின் நகர அபிவிருத்தக்குழு
      நவீன அங்காடி வரிசை அங்கெ கட்டி
      கடைகளை உங்களைப்போன்ற தேவையான                           
      வியாபாரிகளுக்குத் தரப்போகிறது...
.      ஜனங்களுக்கு வசதியாக நடந்தோ, வாகனங்களிலோ
      வந்து சகல விதமான சாமான்களும் வாங்கலாம்.
      வேலை முடியட்டும், அங்கே உங்களுக்கும் கடைநடத்த
      இடம் தரச்செய்ய வேண்டியது எங்கள் பொறுப்பு...
     அதுவரை எப்படியாவது சமாளியுங்க......
 -இப்படிநீங்க வாக்குறுதித் தந்து பத்து பதினஞ்சு
 வருசத்துக்கும் மேலிருக்காதா.....! இடைக்காலத்தில்
 நீங்க எல்லா கட்சிக்காரங்களும் மாறி மாறி
 ஆட்சிபீடம் ஏறி இறங்கீட்டீங்க..
     உங்க ஆசைவார்த்தைகளை நம்பி
     குடியிருந்த பூமியை விட்டு தந்தோம்...
     வசதி படைச்சவங்களுக்கு ஒண்ணும் இல்லை..
     எத்தனை காலம் பட்டினிகிடப்பதென்று, என்னைப்போன்ற
     மற்றவங்க கிடைச்ச அற்பப் பணத்தை வாங்கிகிட்டு
    ஊரை விட்டே போயிட்டாங்க...
    நான் எங்கே போவேன்...என்ன செய்வேன்....
    உங்களை எல்லாம் எத்தனையெத்தனை வாட்டி
    வந்து பார்த்திருப்பேன்...!நீங்க சொன்னவாறு
    எத்தனையெத்தனை கருணை மனுக்கள்.....!
    சும்மா கிடந்த இடத்தில் குப்பை கொட்டி கொட்டி....
    இப்ப வெறும் குப்பைமேடு....
    இப்ப நகர அபிவிருத்திக்குழுவே மனமுவந்து
    குப்பைக்கூளத்தை பதனிடும் தொழிற்சாலைக்கு
    கொடுத்துவிட்டாங்களாம்...நகரசபைக்கும் சம்மதம்...
    தேசீய நெடுஞ்சாலை...பள்ளிக்கூடம், பெருமாள், கண்ணகிக்
    கோயில்கள், மசூதி இவற்றின் பக்கத்தில் கிடக்கும் இடம்..
    எங்களைப் போன்ற வியாபாரிகளுக்காக ஆர்ஜிதம் செய்த இடம்...
    உங்க எல்லோரையும், அரசில் சம்பந்தப்பட்டவங்களையும் எல்லாம்
    வந்து பார்த்தோமே...எல்லோருமா உண்ணாநோன்பு போராட்டம்
    கூட நடத்திப்பார்த்தோமே..  உங்க யாருக்கும்
    மனம் கனியவில்லையே...எங்க வாழ்வு மண்ணானது மட்டுமா..
    சுற்றுப்புற மாசின் நஞ்சால் எங்களுக்கெல்லாம் தீராத அவதி..
                             * * *
    அடுத்ததாக இப்ப என்னைப்போன்ற ஏழைப்பாழைகள்
    எழுத்தை கூட்டி வாசிக்கவாவது படித்த இந்த
    அரசுப்பள்ளியை பஸ்நிலையம் எனச்சொல்லி
    கைவைத்திருக்கீங்களே....நவீன அங்காடி காம்ப்ளக்ஸ்
    குப்பைக்கூள பாக்டரி ஆனதுபோல்
    இந்த பள்ளித்தலமும் ஆகிவிடாது
    என்பதுகென்ன உத்தரவாதம்.......?
      
    

        

Sunday, May 26, 2013

பம்ப் ஹௌஸ்


                                                பம்ப் ஹௌஸ்
 
                                எஙகளூரிலும் ஒரு பம்ப் ஹௌஸுண்டு
                   பம்பிங்கில்லா ப்ம்ப் ஹவுஸ்..
                   மன்னராண்ட காலத்தில் திவானின் கூர்மதியில்
                   சீமைபொறிநுட்பத்தில் விளைந்த நற்பணி
                   ஜனப்பெருக்கமிக்கத் தெருக்களின்
                   இடவசதியில்லா புறாக்கூட்டுவாசிகளின்
                   கழிவுநீர் கழிவுகள் பாதாளச்சாக்கடை வழி
                   பம்ப் ஹௌஸ் வந்துசேரும், உயரத்தில் பெரிய
                   டாங்குகளில்-தொட்டிகளில் பம்ப்செய்யப்பட்டு
                   சுத்திகரிப்பு...பின் பக்கத்து நீர்தடத்தில் நிரப்பப்பட்டு...
                   அங்கிருந்து கடலோர பண்ணைக்கு....
                   சுற்றுப்புறவாசிகளுக்கு சுற்றுச்சூழல் பிரச்னையின்றி
                   இராப்பகல் கேட்டுக்கொண்டிருந்த ஹுங்கார நாதம்..
                  
                   எல்லோரும் இந்நாட்டு மன்னரானதும்.......
                   பயனாளிகள் பெருகினார்கள்....நீர்த்தடமிருந்த
                   இடத்தில் இப்போது அடுக்குமாடிவீடுக்ள்...
                   காலமாற்றத்திற்கேற்ப அபிவிருத்திப்பண்ண
                   கோடிகள் புரண்டதாய்ச் செய்திகள்....
                   எங்கே போச்சோ.....என்னவாச்சோ...
                   இப்பொ உள்ளதும் போச்சு
                   வீட்டில், வெளியில் கழிவுநீர்
                   பொங்கிப்பிரவிக்கும் கோரம்....
                   தெருக்களில், வீதிகளில் பாதாளச்சாக்கடை
                   பூமிமேல் கழிவுநீர் ஆறாய்
                   ஓடிடும் கண்கொள்ளா காட்சி....
                   மழைக்காலத்தில் ஆஹா ஓஹோ....
                   கண்களும் நாசிகளும் கால்களும் மரத்துப்போய்
                   நெடுநாளாச்சு ஊர்வாசிகள் எங்களுக்கு.....
                    வரலாற்று நினைவுச்சின்னமாய்
                    எங்களூர் பம்ப் ஹௌஸ்....
                    பம்பிங்கில்லா பம்ப் ஹைஸ்....

                                            நீல பத்மநாபன்
                  
                    

Tuesday, February 26, 2013


நீலபத்மம், தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா.....
26 ஏப்ரல் 2013நீல பத்மநாபனின் 75 வயது நிறைவு நாள்......

சென்ற ஆண்டுக்கான நீலபத்மம் தலைமுறைகள் விருதுகள்
வழங்கும் விழா 26 ஏப்ரல் 2013 வெள்ளிக்கிழமையன்று மாலை 5.30க்கு தமிழ்ச்சங்கம் பி.ஆர்.எஸ் அரங்கில்
நடைபெறவிருக்கிறது.அவ்வமயம் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் மா திருமலை ,மலையாள மொழி இயல் துறைத் தலைவர் முனைவர் எம்.ஆர். தம்பான், நவீன விருட்சம் ஆசிரியர் திரு. அழகிய சிங்கர், கவிதாயினி திருமதி திலகபாமா, திரு குளச்சல் யூசப் -இன்னும் பல தமிழ், மலையாள அறிஞர்கள் பங்கெடுக்கிறார்கள்.பரிசுபெற்ற கவிதையும் , கதையும் அவற்றின் ஆசிரியர்களே வாசிக்கிறார்கள்.தவிர விழாவில் வெளியிடவிருக்கும் நீல பத்மநாபனின் கவிதைத் தொகுப்பிலிருந்து ஒருசில கவிதைகள் வாசிக்கபடவிருக்கிறது. .சங்கச்செயலாளர் க.வானமாமலையின் ந்கைச்சுவை நிகழ்ச்சி கூத்தரங்கின் சார்பில் மேடையேறுகிறது.  நீலபத்மநாபனின் சில தமிழ், மலையாள  நூல்கள்   வெளியிடப்படுகின்றன.   அனைவரும் வருக. 
                                                                           செயலாளர்
                                                         திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம்



Wednesday, February 20, 2013

கவிதை


மனமாசுக்கள் அகன்றிட.....

நீல பத்மநாபன்

பொங்கலோ பொங்கல்

ஆற்றுகால் அம்மைக்கு பொங்கல்

காடும் மலையும் தாண்டி

அனந்த சயனத்தில் அனுக்கிரகம் பொழியும்

புண்ணிய புராதன பூமியில்

வந்து வாழ்ந்தருளும் குடமலைத் தெய்வமே

ஆற்றுகால் அம்மையே

உனக்கு பொங்கலிட்டு வழிபட

குடும்ப கெடுபிடிகளையெல்லாம் மீறி

கூட்டம் கூட்டமாய் ஓடோடி வந்த

உள்ளூர் வெளியூர் மங்கைகள் நாங்கள்

பொங்கல் போடும் உன் திருமுற்றம் இந்நகரம்

எங்கெங்கும் குவிந்து உயரமாய் எழுந்துநிற்பது

குப்பைக்கூளங்களின் மாசுமலையன்றோ....

அவை எரிந்துயரும் நச்சுப்புகையில்

கறுத்திருண்ட ஆகாயமதில்

இப்போதெல்லாம் கருடனல்ல கரும்சிறகுகள்

வீசி,கூர்மையான நகங்கள் நீட்டி பொங்கல்

பானைகளை பறித்திட வட்டமிடும் பருந்துகள்..

“தெரியாதாடீ உனக்கு, இந்த காந்தளூர்’சாலை’

இப்ப இந்த பட்டணத்தின் விளப்பில்சாலையாம்

அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வரும்போது

இங்கெல்லாம் குப்பைக்கூளங்களை கொணர்ந்து

இறக்கும் லாரிகள் வரிசையாக இருக்குமாம்

அப்பொ அவங்கவங்க வீட்டில்தான் பொங்கல்”



குப்பைக்கூளங்களின் இடையில்

ஆயிரமாயிரம் அடுப்புக்களில்,

கோயில் பண்டார அடுப்பிலிருந்து பகர்ந்து

வந்த அக்கினி ஜ்வாலையில்

பொங்கி வழியும் பொங்கலோ பொங்கல்...

ஆற்றுகால் அம்மைக்கு பொங்கல்

எங்களையும் உன்னையும் இந்த துர்கதிக்கு

ஆளாக்கியவர்களின் மனமாசுக்கள் அகன்றிட

பொங்கலோ பொங்கல்.....



விளப்பில் சாலை= புறநகர் பகுதியில் நகர குப்பைக்கூளங்களைக் கொணர்ந்து இயற்கை உரம் தயாரிக்க ஆர்ஜிதம் செய்யப்பட்ட இடம். பத்து அண்டுகளாய் உரத்தொழிற்சாலைத் தொடங்ப்படாமல் குப்பைக்கூளங்களை குவித்துக்கொண்டிருந்ததால் சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்பட்ட அப்பகுதி வாழ் மக்களின் எழுச்சிக் காரணமாய் கடந்த ஒராண்டு காலமாய் இந்நகர குப்பைக்கூளங்கள் அங்கு கொண்டுப்போகப்படுவதில்லை.

. 2013



Tuesday, February 19, 2013

நேற்று இன்று


        கவிதை


                                                  நேற்று
                         இன்று
                                 நீல பத்மநாபன்
                தன் காரிய சித்திக்காக
                பரஸ்பரம் சிரம் கொய்து
                பொன் தாம்பாளத்தில் வைத்து
                ஐயனே உம் பாதாரவிந்தத்தில்
                சுயம் சமர்ப்பித்து
                சிந்தை குளிர்ந்திருந்தோம் நாங்கள்..........
                உம்மை தூக்கியெறிந்த பின்னர்
                சாட்டைவார் வீசி
                                    இட்டுச்செல்ல நாதனின்றி
                பரஸ்பரம் பழி கூறி
                தந்த கோபுரத்தில்
                தம் போக்கில் ஆடிக்களிக்கிறோம்......